NIA விசாரணைக்கு ஆஜராகும் 'நாம் தமிழர்’ இடும்பாவனம் கார்த்திக்.. எல்.முருகன் எச்சரித்தது போல ‘கைது’?
சென்னை: தடை செய்யப்பட்ட இயக்கத்தை உயிர்ப்பிக்க முயற்சித்தது தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செயலாளர் இடும்பாவனம் கார்த்தி (இடும்பாவனம் கார்த்திக்) இன்று தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (NIA, என்.ஐ.ஏ) முன்பு ஆஜராகிறார். இன்றைய விசாரணைக்கு பின் இடும்பாவனம் கார்த்தி கைது செய்யப்படுவாரா? என்கிற பரபரப்பு நிலவுகிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கோரி பிரபாகரன் தலைமையில் செயல்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம். 2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்துக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பாட்டில் இல்லை. ஆனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படம், புலிகள் இயக்க கொடியை கடந்த பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியினர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தி பேசுவது நாம் தமிழர் கட்சியின் கொள்கையாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க ஆயுதம் கடத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக பலரும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்பது என்.ஐ.ஏ. சந்தேகம்.
இதனடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் வீடுகளில் அண்மையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் நாம் தமிழர் நிர்வாகி இடும்பாவனம் கார்த்தியை விசாரணைக்கு ஆஜராகவும் சம்மன் அனுப்பி இருந்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியினர் வழக்கும் தொடர்ந்தனர். இந்நிலையில் இடும்பாவனம் கார்த்தியை இன்று விசாரணைக்கு அழைத்துள்ளது என்.ஐ.ஏ.
இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சியினர் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாம் தமிழர் கட்சியினரை தீவிரமாக கண்காணித்த பின்னரே இந்த சோதனை நடைபெற்றது. இதனடிப்படையில் கைது நடவடிக்கை இருக்கும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று என்.ஐ.ஏ. விசாரணைக்கு இடும்பாவனம் கார்த்தி ஆஜராகிறார். இந்த விசாரணையைத் தொடர்ந்து இடும்பாவனம் கார்த்தி கைது செய்யப்படுவாரா? என்கிற பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications