சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மத்திய அரசு பங்கு இல்லை.. செலவை தமிழக அரசே ஏற்கணும்.. நிர்மலா சீதாராமன்
சென்னை: சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, மெட்ரோ 2ம் கட்டம் என்பது மாநில அரசுத் திட்டம் என்றும் எனவே இத்திட்டத்தின் முழுச் செலவும் தமிழக அரசின் உடையது தான் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோவின் 2ம் கட்ட திட்டம் இப்போது படுவேகமாக நடந்து வருகிறது. இதற்கான செலவை இப்போது வரை முழுமையாக மாநில அரசே மேற்கொண்டு வருகிறது.

நிர்மலா சீதாராமன் விளக்கம்: மத்திய அரசு தனது பங்களிப்பைத் தர மறுப்பதாகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மத்திய அரசு தனது நிதியை விடுவிக்க வேண்டும் எனத் தமிழக அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். இது குறித்து முதல்வர் ஸ்டாலினும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கியுள்ளார். சென்னையில் ஆங்கில செய்தி ஊடகமான தி இந்து சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.
மாநில அரசின் திட்டம்: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு ஆகும் ₹ 7,425 கோடி செலவில் மத்திய அரசு தனது பங்கை விடுவிக்கவில்லை என்று தமிழக அரசு சொல்வது குறித்த கேள்விக்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், "இத்திட்டத்தில் மத்திய அரசின் பங்கு இருந்தால், அது சுமார் ₹ 7,400 கோடி என்ற ரேஞ்சில் இருக்கும்.. ஆனால், கடந்த 2018ஆம் ஆண்டிலேயே சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டம் என்பது மாநில அரசின் திட்டமாகச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. எனவே, இத்திட்டத்தின் முழு செலவையும் மாநில அரசே ஏற்க வேண்டும். மத்திய அரசு பங்கு இருக்காது.
மத்திய அரசு இத்திட்டத்திற்காக வேறு சில நிதிகளை விடுவிக்கலாம். அவை அனைத்தும் ஏற்கனவே தெளிவாக விளக்கப்பட்ட விதிகளின் அடிப்படையிலேயே இருக்கும். அவை அனைத்தும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை. எனவே, சென்னை மெட்ரோவுக்கான நிதியைப் பொருளாதார விவகாரத் துறை க்ளியர் செய்யவில்லை எனச் சொல்வதை ஏற்க முடியாது.
மத்திய அரசின் கடமை: சர்வதேச கடன்களைப் பெற மாநில அரசுக்கு உதவுவதே பொருளாதார விவகாரத் துறையின் கடமையாகும். மத்திய அரசு இதற்கான நடவடிக்கையைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. இதுபோல ரூ. 32,000 கோடி அளவுக்குச் சர்வதேச கடன்களைப் பெற மத்திய அரசு உதவியிருக்கிறது" என்றார். இதுபோல கடனாகப் பெற்றுத் தந்த நிதியில் ரூ. 6,000 கோடியில் ஒரு ரூபாயைக் கூட மாநில அரசு பயன்படுத்தவில்லை என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சரியான நேரத்தில் கொடுத்தால் இதை மத்திய அரசின் திட்டமாகவும் ஏற்போம்.. ஆனால் நீங்கள் (தமிழ்நாடு அரசு) அந்தத் திட்டத்தைத் தொடர்ந்து மேற்கொள்கிறீர்கள். உங்களுக்கு நிதி வருகிறது.. அதை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்.
சிரமத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது: அதேநேரம் மாநில அரசின் சிரமத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் இது மாநில அரசின் திட்டமாக இருக்கும் போது, ஒவ்வொரு கடனும் மாநிலத்தின் மொத்த கடன் கணக்கில் வரும். இதனால் மாநில அரசின் நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை உச்ச வரம்பைத் தாண்டக் கூடும்.. எனவே, இதுபோன்ற பெரிய திட்டங்களைச் செயல்படுத்துவது மாநில அரசுகளுக்குக் கடினமாக இருக்கும். அதனால்தான் நாட்டின் பெரும்பாலான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியளிக்கிறது.
எனவே, இதை மாநில அரசின் திட்டமாகச் செயல்படுத்தத் தமிழக அரசு முடிவெடுத்துள்ள போது மத்திய அரசு நிதியை மறுக்கிறது என்பதை ஏற்க முடியாது. அரசியல்வாதிகள் தொடர்ந்து இதுபோல கூறி வருகிறார்கள். அவர்கள் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆதாரம் இல்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார்கள்" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications