"ஒரு எம்.பி சீட்டுக்காக அதிமுக கூட்டணியில் சேரமாட்டோம்”.. பிரேமலதா பளிச்! திரும்பி பார்க்கும் தலைகள்
சென்னை: "ஒரு எம்.பி சீட்டுக்காக அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டோம். கடைக்கோடி தொண்டர்களும் நிர்வாகிகளும் விரும்புபவர்களுடன் கூட்டணி அமைப்போம். ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து தெளிவான முடிவெடுத்து அறிவிப்போம்" என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகள், பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'இல்லம் தேடி, உள்ளம் நாடி' என்ற பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "மின் கட்டண உயர்வு, அதிக வரிவிதிப்பு ஆகியவற்றால் தொழில்கள் முடங்கியுள்ளன. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. இதற்கெல்லாம் மது போதை தான் காரணம். தவெக எம்ஜிஆரையும், விஜயகாந்தையும் பிரச்சாரத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். ஒரே ஒரு எம்ஜிஆர் தான், எம்ஜிஆருக்கு மாற்று யாரும் கிடையாது, அது போல் ஒரே ஒரு கேப்டன் தான். அவர்களுக்கு யாரும் மாற்று ஆகமுடியாது.
வெளி மாநில வாக்காளர்களை தமிழகத்தில் சேர்க்கக்கூடாது, இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அந்தந்த மாநிலத்தில் மட்டுமே வாக்காளர்களை பதிவு செய்ய வேண்டும். வாக்கு திருட்டு என்று நடந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும். வாக்குரிமை பறிக்கப்பட்டால் ஜனநாயகம் தேவையற்றதாகிவிடும். இதற்கு மத்திய மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட்டு மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
யாரும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட முடியும் என்பதை கேப்டன் நிரூபித்துள்ளார். 2026ல் உறுதியாக கூட்டணி ஆட்சி தான். இந்த முறை கூட்டணி ஆட்சி தான் தமிழ்நாட்டில் அமையும். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் தேமுதிக கூட்டணி அமைச்சரவையில் அங்கம் வகிக்கும். தேமுதிகவுக்கு ஒரு எம்.பி சீட் தருவதாக அதிமுக கூறியது. எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தது உண்மைதான். அதில் எந்த வருடம் என்று குறிப்பிடவில்லை, அவர்கள் ஏமாற்றவில்லை. அடுத்த ஆண்டு தருவதாக சொல்லி இருக்கிறார்கள்.
கூட்டணி தர்மத்தை மதிப்பவர்களுக்கு தான் எதிர்காலம் இருக்கும். ஒரு எம்.பி சீட்டுக்காக அதிமுக கூட்டணிக்கு செல்ல மாட்டோம். கடைக்கோடி தொண்டர்களும் நிர்வாகிகளும் விரும்புபவர்களுடன் கூட்டணி அமைப்போம். 80% பிரச்சாரம் முடித்துள்ளேன். இன்னும் அடுத்த கட்ட பிரசாரம் கன்னியாகுமரியில் தொடங்க உள்ளேன். அதன் பிறகு ஜனவரியில் மாநாட்டில் கூட்டணி அறிவிப்போம்" எனத் தெரிவித்துள்ளார் பிரேமலதா.
அண்மையில் மதுரையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சந்தித்து பேசினார். கூட்டணி தொடர்பாக ஆர்.பி உதயகுமார் பேசினாரா என்ற விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில், ஒரு எம்.பி சீட்டுக்காக அதிமுக உடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என பிரேமலதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications