13 தொகுதிகளுக்கு அறிவிப்பில்லை.. வாரிசுகளுக்கும் சீட் இல்லை.. அதிமுகவின் ராஜதந்திரம்!
சென்னை : ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதை விட, அதிமுக.,வை மீண்டும் ஆட்சிக்கு வர விட கூடாது என்பதிலேயே எதிர்க்கட்சிகள் அனைத்தும் உறுதியாக உள்ளன. இதற்காகவே திமுக பல கட்சிகளை இணைத்து, மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது.
புதிதாக களத்தில் இறங்கி இருக்கும் கமலும், அதிமுக- திமுக.,வை விரட்டுவது தான் நோக்கம் என தெரிவித்துள்ளார். ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாமல் அதிமுக.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் இறங்கி உள்ளன. மீண்டும் ஆட்சியை தக்க வைக்க அதிமுக பல ராஜதந்திரங்களை உபயோகித்து வருவதாக கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணி கட்சிகள்
அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் உள்ளன. பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கடைசி நிமிடத்தில் கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்தது. தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகளுடன் நடத்தி வந்த கூட்டணி பேச்சு என்ன ஆச்சு என்பது பற்றிய தகவல் இதுவரை வெளியாகவில்லை.

யாருக்கு எத்தனை தொகுதி
பாமக.,விற்கு 23 தொகுதிகளும், பாஜக.,வுக்கு 20 தொகுதிகளையும் அதிமுக ஒதுக்கியது. பசும்பொன் தேசிய கழகத்திற்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வருவதற்கு முன்பே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அடங்கிய 6 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் அறிவித்தது. இன்று 171 பேர் கொண்ட 2வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனால் அதிமுக 177 இடங்களில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

13 தொகுதிகள் யாருக்கு
கூட்டணி கட்சிகளுக்கு 44 தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக, தங்கள் கட்சி சார்பில் 177 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மீதமுள்ள 13 தொகுதிகளுக்கும் எந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதற்கு காரணமும் சொல்லப்படவில்லை. இது தேமுதிக.,விற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளா அல்லது தமாக மற்றும் புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்குவதற்காக நிறுத்தப்பட்டுள்ளதா என தெரியவில்லை. தமாக, புதிய தமிழகம் கட்சிக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகள் என்றால், இத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுமா? அப்படி ஒதுக்கினால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதிமுக.,வின் ராஜதந்திர நடவடிக்கை
தற்போது அமைச்சர்களாக உள்ள 30 பேர், பெரும்பாலான எம்எல்ஏ.,களுக்கு அவர்கள் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற அதே தொகுதியிலேயே சீட் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மக்களுக்கு அதிகம் தெரிந்த முகங்கள், அவரவரின் சொந்த தொகுதிகளில் இந்த முறை அதிமுக சீட் வழங்கி உள்ளது. சட்டசபையில் தனிக்கட்சி பெரும்பான்மையுடன் இருக்க, பெரும்பான்மைக்கு தேவையான 168 இடங்களை விட கூடுதலாக 9 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. மத்தியில் ஆளும் பாஜக, வட தமிழகத்தில் பலமாக இருக்கும் பாமக ஆகியவற்றிற்கு கூடுதல் சீட் ஒதுக்கியது போன்றவை அதிமுக.,வின் ராஜநந்திர நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

வாரிசுகளுக்கு இடமில்லை
ஓபிஎஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களின் மகன்களுக்கு இந்த முறை சீட் கொடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதிமுக.,வில் வாரிசு அரசியல் கிடையாது என்பதை நிரூபிக்க வாரிகள் யாருக்கும் சீட் வழங்கப்படவில்லை. ஆட்சியை தக்க வைத்தே தீர வேண்டும் என்பதற்காக புதிதாக எந்த ரிஸ்க்கையும் அதிமுக எடுக்க விரும்பவில்லை என்பதே இதற்கு காரணம்.












Click it and Unblock the Notifications