”நன்மையில்லை” மரபணு மாற்றப்பட்ட விதைகள்.. சில நிறுவனங்களுக்கு லாபம்.. குற்றம்சாட்டும் வெற்றிமாறன்!
சென்னை: மரபணு மாற்றப்பட்ட விதைகளால் விவசாயிகளுக்கு எந்தவித நன்மையும் இல்லை என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரை வணிக நோக்கில் பயிரிட அனுமதிப்பதற்கு முன்னோட்டமாக, அதன் விதைகளை உற்பத்தி செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அனுமதி அளித்திருக்கிறது.
சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தால், இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரின் வணிக நோக்கிலான சாகுபடி அடுத்த இரு ஆண்டுகளில் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் பேரணி
இந்த நிலையில் சென்னையில் மரபணு மாற்றப்பட்ட கடுகை அனுமதிக்கு தடை விதிக்க கோரி விவசாயிகள், சமூக அமைப்புகள் சார்பாக பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரை வணிக நோக்கில் பயிரிட அனுமதிக்க கூடாது. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உற்பத்தி செய்ய தொடர்ந்து முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

நிறுவனங்களுக்கு லாபம்
இதனால் நமது பாரம்பரிய பயிர்கள் அழிந்து வருகிறது. அதேபோல் விவசாயிகளும் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரை வணிக நோக்கில் பயிரிட அனுமதிப்பதால் மகசூல் அதிகமாவதில்லை. விவசாயிகள், சுற்றுச்சூழல், நிலத்திற்கும் பேரிழப்பாகவே இருக்கிறது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் லாபமாக அமைகிறது.

வெற்றிமாறன் கோரிக்கை
இதனை கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. இதனை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்பது எங்கள் கோரிக்கை. இது நமக்கு மட்டுமல்ல நமக்கு பின் வரும் அடுத்த தலைமுறைக்கும் மண்ணை காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. உலகம் முழுக்கவே மரபணு மாற்றப்பட்ட விதைகள் கொண்டு வருவதில் முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்கு உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தே வருகின்றனர் என்று தெரிவித்தார்.

விவசாயி வெற்றிமாறன்
அண்மைக் காலமாக இயக்குநர் வெற்றிமாறன் அதிகமாக விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். சொந்தமாக விவசாயம் செய்யும் வெற்றிமாறன், தற்போது மரபணு மாற்ற விதைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மரபணு மாற்ற விதைகளை அனுமதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமதாஸ் கருத்து
சில நாட்களுக்கு முன் பாமக நிறுவனர் ராமதாஸ், இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிரை வணிக நோக்கில் பயிரிட எந்த தேவையும் இல்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகில் உற்பத்தியை பெருக்குவதற்கான எந்த சிறப்பு மரபணுவும் இல்லை. எனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வகையின் விதை உற்பத்திக்கு மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அளித்துள்ள அனுமதிக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications