அரசு பேருந்து கட்டணம் விரைவில் உயர்கிறதா? குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த போக்குவரத்து துறை!
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே "அரசு பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளன" என்ற தகவல் காட்டுத்தீயாய் பரவி, தினசரி பேருந்துகளையே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருந்தது. தற்போது இந்த விவகாரத்திற்குப் போக்குவரத்துத் துறை அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
போக்குவரத்துக் கழகம் பெரிய நஷ்டத்தில் இயங்கி வருவதாக வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டதாலேயே, கட்டணம் நிச்சயம் உயரும் எனப் பரவலாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போக்குவரத்துத் துறை அதிரடி விளக்கம்
பொதுமக்களிடையே பரவி வரும் குழப்பங்களுக்கு விளக்கம் அளித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக எந்தவொரு கொள்கை முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே, பேருந்து கட்டண உயர்வு குறித்து சமூக வலைத்தளங்களிலும், வெளியிலும் உலா வரும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் வதந்தியே. பொதுமக்கள் இத்தகைய வதந்திகளை நம்ப வேண்டாம்; அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும்."
மேலும், எதிர்காலத்தில் பேருந்து கட்டண மாற்றம் தொடர்பாக ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால், அது முறைப்படி அரசு மூலம் அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்படும் என்றும் அந்த விளக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளை அறிக்கை.. போக்குவரத்து கழகத்தின் நஷ்டம்
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்ற ஜோசப் விஜய், முந்தைய திமுக அரசின் நிதிநிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு, நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் மற்றும் நிதித் துறைச் செயலர் மு.அ. சித்திக் ஆகியோர் தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் போக்குவரத்துத் துறையின் தற்போதைய நிதி நெருக்கடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒட்டுமொத்த இழப்பு: அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இதுவரை சுமார் ₹72,667 கோடி இழப்பைச் சந்தித்துள்ளன. அரசுப் பேருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் இயங்குவதற்கு ₹78.81 செலவு ஆகும் நிலையில், அதிலிருந்து கிடைக்கும் வருவாய் வெறும் ₹25.97 மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
போக்குவரத்து மற்றும் மின்சாரம் போன்ற முக்கிய பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் மக்களுக்குச் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத் திட்டங்களால் ஏற்படும் இழப்பீட்டை, அரசு நேரடியாக ஈடுசெய்யாமல் 'உத்தரவாதக் கடன்' (Guaranteed Loan) வழங்கியதே இந்த நிதி நெருக்கடிக்கு முக்கியக் காரணம் என அந்த வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாமானியர்களுக்கு நிம்மதி பெருமூச்சு
போக்குவரத்துக் கழகம் இவ்வளவு பெரிய நஷ்டத்தில் இயங்கி வருவதாக வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டதாலேயே, கட்டணம் நிச்சயம் உயரும் எனப் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், "நஷ்டம் இருந்தாலும் தற்போதைக்குக் கட்டண உயர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை" எனப் போக்குவரத்துத் துறை தெளிவுபடுத்தியுள்ளதால், பொதுமக்கள் மற்றும் தினசரி பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications