சொந்தமாக கார் கிடையாது.. துணை ஜனாதிபதி வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனின் சொத்து எவ்வளவு தெரியுமா?
சென்னை: பாஜக கூட்டணி கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக செயல்பட்டு வரும் சிபி ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமாக கார் இல்லை என்பதும், அவரது மொத்த சொத்து மதிப்பு குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது உடல்நலனை காரணம் காட்டி அவர் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். அடுத்த மாதம் 9 ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் பாஜக வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக அவர் உள்ள நிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை மனதில் வைத்து சிபி ராதாகிருஷ்ணனுக்கு இந்த முக்கிய பொறுப்பை பாஜக மேலிடம் வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் சிபி ராதாகிருஷ்ணனின் சொத்து மதிப்பு பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2019ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் பாஜக சார்பில் கோவை தொகுதியில் போட்டியிட்டார். அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பிஆர் நடராஜனிடம் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில், சிபி ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவில் சொத்து விவரங்கள் பற்றிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில், அவரது சொத்து மதிப்பு ரூ.67.11 கோடி என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதில் பணம், வங்கி முதலீடு, பங்கு சந்தை முதலீடு, காப்பீடு, நகைகள் உள்ளிட்ட என்று மொத்தம் ரூ.7.31 கோடி அசையும் சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் விவசாய நிலம், பிற நிலங்கள், வணிக கட்டடங்கள், ரெசிடென்சியல் கட்டடங்கள் என்று ரூ.59.6 கோடிக்கு அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் 2025ம் ஆண்டின் நிலவரப்படி அவரது சொத்து மதிப்பு ரூ.55-65 கோடி வரை இருக்கலாம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி கோடிக்கணக்கில் சிபி ராதாகிருஷ்ணன் சொத்து வைத்திருந்தாலும் கூட அவருக்கு சொந்தமாக கார் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications