ஜெயிலில் கைதிகளிடம் ஜாதி கேட்க கூடாது.. சாதிய பாகுபாடு? சிறை விதிகளில் மாற்றம்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: சிறைகளில் கைதிகளின் ஜாதியை கேட்பது, ஜாதி அடிப்படையில் பணி ஒதுக்குவது போன்றவை கூடாது என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.. சிறைக்கைதிகளிடம் சாதி அடிப்படையில் வேலை ஒதுக்குதல் போன்றவையும் இனி அனுமதிக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில், தமிழக அரசு சிறைத் துறை விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளது.. அது என்ன தெரியுமா?
கடந்த 2020ம் ஆண்டு சிறைச்சாலைகளில் ஜாதி பாகுபாடுகள் குறித்து ஆய்வு செய்த பத்திரிக்கையாளர் சுகன்யா சாந்தா, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று சிறைச்சாலைகளில் ஜாதி பாகுபாடுகள் தடை செய்யப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் அனுப்பியது.

விதிமுறை திருத்தங்கள்
இந்த வழக்கானது, கடந்த வருடம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.. இதனை அப்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சகம் தமிழகம் உட்பட 14 மாநிலங்களுக்கு சிறைகளில் ஜாதி பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கடிதங்களை எழுதியது..
இதையடுத்து, தற்போது தமிழக சிறைகளில் ஜாதி பாகுபாடுகளை நிறுத்த வேண்டும் தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.. தமிழக சிறைத்துறை விதிமுறை திருத்தங்களை உடனடியாக அமல்படுத்தும்படி தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் இதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
சாதி கேட்கக்கூடாது
அதன்படி, "புதிய கைதிகள் சிறையில் அடைக்கப்படும்போது, அவர்களின் சாதி தொடர்பான எந்தவொரு தகவலையும் சிறை அதிகாரிகள் பெறக் கூடாது, பதிவு செய்யக் கூடாது, அந்த விவரங்கள் எந்தப் பதிவேட்டிலும் இடம்பெறக் கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகள் சாதி அடிப்படையில் வகைப்படுத்தப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். சிறைப் பணிகள், குறிப்பாகக் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளை சாதி அடிப்படையில் ஒதுக்கக் கூடாது என்றும் அந்தப் பணிகள் இயந்திரங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
கவனம் பெறும் அறிவிப்பு
இந்த அறிவிப்பானது அனைத்து தரப்பினரின் கவனத்தையும் பெற்று வருகிறது.. காரணம், தமிழக சிறைச்சாலைகளில் கைதிகள் சாதி ரீதியாக அடையாளம் காணப்பட்டு, தனித்தனி இடங்களில் அடைக்கப்படுவதாகவும், சாதி ரீதியாக கைதிகளுக்குச் சிறையில் பணி ஒதுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வந்தது.
குறிப்பாக சமையல் வேலையில் உயர் சாதியினரும், கழிவறை சுத்தம் செய்வதில் கீழ் சாதி என ஒதுக்கப்பட்டவர்களுக்கும் பிரித்து தருவதாக புகார்கள் கிளம்பி சலசலப்பை உண்டுபண்ணின.. தற்போது தமிழக அரசு சிறைத் துறை விதிமுறைகளில் மாற்றம் செய்துள்ளதை அனைவரும் வரவேற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications