மருத்துவமனை போனது உண்மை.. எனக்கு கொரோனா இல்லை.. உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம்
சென்னை: தனக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் கேபி அன்பழகன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பது அனைவரும் அறிந்ததுதான். இந்த நிலையில் அமைச்சர் குழுவை களமிறக்கி தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முதல்வர் ஈடுபட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார், காமராஜ் உள்ளிட்டோருடன் அன்பழகனும் பங்கேற்றார்.

ஆலோசனை கூட்டங்கள்
அப்போது பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களால் அங்கு கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முதல் அன்பழகனுக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பரிசோதனை செய்து கொண்டார்.

காய்ச்சல்தான்
இதனிடையே, அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின. வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டது. மருத்துவமனை நிர்வாகமே இதை அறிவித்ததாக கூறப்பட்டது. ஆனால் இன்று காலை இதை அன்பழகன் மறுத்துள்ளார். தனக்கு காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனைக்கு சென்று வந்ததாகவும், தற்போது காய்ச்சல் சரியாகிவிட்டதாகவும் கூறுகிறார் அவர்.

முன்கள பணியாளர்கள்
மேலும், வாரத்திற்கு ஒரு முறை கொரோனா பரிசோதனையை அவர் மேற்கொண்டு வருவதாகவும் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாட்டில் முன் களத்தில் நின்று பணியாற்ற கூடியவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது என்பது சென்னையில் அதிகரித்து வருகிறது.

எம்எல்ஏக்கள்
காவல்துறையினர், மருத்துவ பணியாளர்கள் மட்டுமின்றி, எம்எல்ஏக்களும் இதில் பாதிக்கப்படுகிறார்கள். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ அன்பழகன் கொரோனா பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர்க்கும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications