ஆக்சிஜன் பற்றாக்குறையால் தமிழ்நாட்டில் உயிரிழப்பே நடக்கவில்லை.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை: தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சத்தில் இருந்தது. அப்போது திடீரென ஆக்ஸிஜன் தேவை அதிகரித்தது. பல இடங்களில் பற்றாக்குறை நிலவியது. கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் கொத்துக்கொத்தாக நோயாளிகள் உயிரிழந்தனர்.
5 பைசாவுக்கு பிரியாணி.. மதுரை ஹோட்டலின் கவர்ச்சிகர விளம்பரம்.. முண்டியடித்த மக்கள்.. விரட்டிய போலீஸ்
டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் பதிவாகி அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
ராஜ்யசபாவில் அமைச்சர் பதில்
ஆனால் ராஜ்யசபாவில் நேற்று இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்ததாக மாநிலங்கள் மத்திய அரசுக்கு அறிக்கை தரவில்லை என்று தெரிவித்தார். கண் முன்பாக பலரும் பார்த்த ஒரு சம்பவத்தை அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று மாநில அரசுகள் தெரிவித்து இருப்பதன் பின்னணி என்ன என்பது புரியாத புதிராக இருக்கிறது.
ஆக்சிஜன் தேவை அதிகரித்தது
இதனிடையே, இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் ஆக்சிஜன் தேவை 230 மெட்ரிக் டன்னாக இருந்தது, ஆனால் ஒரு கட்டத்தில் தினசரி புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 36 ஆயிரமாக அதிகரித்தது. எனவே, தினசரி ஆக்சிஜன் தேவை 550 மெட்ரிக் டன் என்ற அளவிற்கு உயர்ந்தது.
தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை
அருகில் உள்ள மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததன் காரணமாக, வட மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலமாக ஆக்சிஜனை கொண்டு வந்து சப்ளை செய்தோம். எனவே ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்தார்.
செங்கல்பட்டு சம்பவம்
மே 4-ஆம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் 13 நோயாளிகள் உயிரிழந்ததாக வெளியான தகவல் பற்றி கேட்டபோது, திரவ ஆக்சிஜன் காலியானதன் காரணமாக, உடனடியாக சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் சப்ளை வழங்கப்பட்டது. எனவே ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் உயிரிழக்கவில்லை. வேறு நோய்கள் காரணமாக இறந்திருப்பார்கள் என்று தெரிவித்தார்.
மாநிலங்கள் தனிக்கணக்கு
அனைத்து மாநிலங்களும் கொரோனா நோய் பாதிப்பு காரணமாக நோயாளிகள் உயிரிழந்ததாக கணக்கு காட்டி இருக்கிறதே தவிர ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக தனியாக ஒரு கணக்கை காட்டவில்லை என்பதால்தான் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்பது போல வரலாற்றில் பதிவாகி விட்டது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.