அடுத்த ரெய்டுக்கு எப்ப வர்ற போறீங்கன்னு என் பொண்ணு கேட்கிறாள்.. கலாய்த்த சி விஜயபாஸ்கர்
சென்னை: அடுத்த ரெய்டுக்கு எப்ப வர்ற போறீங்கன்னு என் பொண்ணு கேட்கிறாள். அந்தளவுக்கு நாங்கள் எல்லாவற்றுக்கு தயாராகத்தான் இருக்கிறோம் என மாஜி அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கருக்கு சொந்தமான மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளூர், சென்னை ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் குறி போக்குவரத்துத் துறை அமைச்சராாக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு வந்தது. அடுத்தது எஸ் பி வேலுமணி, அதற்கு அடுத்து கேசி. வீரமணி, இவரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு சோதனைக்குள்ளான 4ஆவது அமைச்சர் சி விஜயபாஸ்கர் ஆவார்.

சொந்தமான இடம்
இந்த நிலையில் நேற்றைய தினம் அவருக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது முறையாக லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ 16.37 லட்சம், 1,872 கிராம் தங்க நகைகள், 8.28 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டன. மேலும் இந்த வழக்கில் 120 ஆவணங்கள், சிடி, பென்டிரைவ், ஐபோன்கள் , பேங்க் லாக்கரின் சாவிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சி விஜயபாஸ்கர்
இந்த சோதனை குறித்து சி விஜயபாஸ்கர் கூறுகையில் இது மாதிரியான சோதனை நடைபெறும் போதெல்லாம் அதனை எதிர்கொள்ளும் மன வலிமையை எங்களுக்கு ஜெயலலிதா கற்றுக் கொடுத்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே இந்த சோதனை நடத்தப்படுகிறது. பல்வேறு பணிகள் இருக்கும் நிலையில் வெறும் 3 அறைகளையும் ஒரு ஹாலையும் சோதனை செய்ய இத்தனை அரசு அதிகாரிகளை பயன்படுத்தியுள்ளதை பார்க்கும் போது அரசின் நோக்கம் நன்றாகவே தெரிகிறது.

குடும்பத்திற்கே உண்டு
எனது மகள் அந்த அதிகாரியிடம் அடுத்தது எப்போ வரப்போறீங்க என கேட்டார். அந்த அளவுக்கு எல்லாத்தையும் எதிர்கொள்ளும் சக்தி எங்கள் குடும்பத்திற்கே உண்டு. எல்லாவற்றுக்கும் ரெடியாகத்தான் இருக்கிறோம் என தெரிவித்தார் சி விஜயபாஸ்கர்.

லஞ்ச ஒழிப்பு சோதனை
அது போல் சென்னையில் விஜயபாஸ்கருக்கு பல கோடி மதிப்பிலான வீடு இருப்பதாக தகவல்கள் வெளியானதை அவர் மறுத்துள்ளார். அவருக்கு சென்னையில் இருப்பது வாடகை வீடுதான் என்றும் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இவரை போல் எஸ்பி வேலுமணியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications