விஜய்யின் தவெக ஆட்சிக்கு.. கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையூறாக இருக்காது! உடைத்து பேசிய வீரபாண்டியன்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அதிகாரத்திற்கு வர, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய் ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்திருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் பெரிய சாதனையை செய்திருக்கிறார். ஏறத்தாழ 35% வாக்குகளை பெற்று, திமுக மற்றும் அதிமுக கட்சிகளை ஓரம் கட்டியுள்ளார். இருப்பினும் விஜய் தனித்து ஆட்சியமைக்கும் அளவுக்கு தனிப்பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை.

எனவே முதல் ஆளாய் காங்கிரஸ் கட்சியும் அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), ஐயுஎம்எல், விசிக கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. எனவே பெரும்பான்மையுடன் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார்.
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்திருக்கிறது. அதாவது இவர்கள் அமைச்சராகவோ, மற்ற பதவிகளையோ வகிக்க மாட்டார்கள். அதேநேரம் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற முடியும்.
எனவே, ஆட்சியின் குறைகளை சுட்டிக்காட்டி எப்போது வேண்டுமானாலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற வாய்ப்பு இருக்கிறது என்று பரவலாக பேச்சுக்கள் அடிபட்டன. இதற்கு தற்போது வீரபாண்டியன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
"தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் முன்மொழிந்துள்ளார்களோ.. அந்த கட்சியை இடதுசாரிகள் வழிமொழிந்துள்ளனர். இப்படி செய்ததன் மூலம் இன்னொரு தேர்தலும், ஆளுநர் தலையீடும், குடியரசுத் தலைவர் ஆட்சியும் தடுக்கப்பட்டிருக்கிறது.
நாங்கள் எந்த நிபந்தனையும் இன்றி தவெகவை ஆதரரிக்கிறோம். சிலர் கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆட்சிக்கு இடையூறு இருக்கும் என்று கூறுகிறார்கள். இது நூற்றாண்டு கண்ட கட்சி. இந்த வரலாற்றில் எந்த கட்சியின் ஆட்சிக்கும் நாங்கள் இடையூறாக இருந்தது கிடையாது. எனவே தமிழகத்திலும் இதே நிலை நீடிக்கும்.
தமிழகத்தில் பல நூறு டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. இருப்பினும், அந்த கடைகளில் பணியாற்றியவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளையும் அரசு செய்ய வேண்டும்.
மறுபுறம், முதலமைச்சருக்கு ஆலோசனை சொல்லும் இடத்தில் ஜோதிடர்களை விட மக்கள் மனதை அறிந்தவர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications