தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்!
சென்னை: என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த பிரச்சனையும் இல்லை சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது. சசிகலா தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா இல்லையா என்பதை ஓரிரு நாட்களில் தெரிவிப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசிக்க எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றிருக்கிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை எப்போது நிறைவடையும் என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இதற்கிடையே இன்று எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லிக்கு அமித் ஷாவை சந்திக்க சென்றிருக்கிறார். திடீரென எடப்பாடி பழனிசாமி எதற்காக அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றார் என தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தொகுதிப் பங்கீட்டில் ஏதேனும் பிரச்சனையா? கூட்டணியில் குழப்பமா? என விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "பியூஸ் கோயல் சென்னை வருகிறார் என்று எந்த தகவலும் கிடையாது. செய்தியும் கிடையாது. நான் நேற்றும் உங்களை பார்த்திருக்கிறேன். இன்றும் பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு செய்தியே இல்லை. இப்பொழுது எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று புறப்பட்டு இருக்கிறார் என்று கூறியுள்ளார்கள்.
தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த பிரச்சனையும் இல்லை சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது. நான் சென்னை சென்ற பிறகு தான் தொகுதி பங்கீடு பற்றி முடிவு செய்ய முடியும். இன்று மாலை நான் சென்னை புறப்படுகிறேன். எதிரணியில் இருப்பவர்கள் எத்தனை சீட்டு வாங்கி இருக்கிறார்கள் என்று பார்த்து நான் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை.
நாங்கள் எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை இனிதான் முடிவு செய்வோம். எங்கள் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி. சசிகலா, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா இல்லையா என்பதை ஓரிரு நாட்களில் தெரிவிப்போம். தமிழக வெற்றிக் கழகத்துடன் நாங்கள் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. பாஜக எங்களோடு கூட்டணிக்கு முயற்சி செய்திருக்கிறார்கள் என்று நடிகர் விஜய் ஏன் கூறுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. தொகுதி பங்கீடு தேசிய ஜனநாயக கூட்டணியில் வெகுவிரைவில் முடிய உள்ளது" எனக் கூறியுள்ளார்.
டெல்லி சென்றடைந்த எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை தலைமையிலான அக்கட்சி நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முற்பட்டனர். அதற்கு எடப்பாடி பழனிசாமி, "டெல்லி பயணத் திட்டம் குறித்து நாளை (வெள்ளிக்கிழமை) விரிவாக சொல்கிறேன்" எனத் தெரிவித்துவிட்டு சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.












Click it and Unblock the Notifications