செல்வப்பெருந்தகை வீட்டில் ஐடி ரெய்டு நடக்கவில்லை- வருமான வரித் துறை விளக்கம்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை ஏதும் நடத்தவில்லை. அவரை ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு செல்லவிடாமல் தடுத்ததாக கூறுவதும் உண்மை இல்லை என வருமான வரித் துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அந்த துறை அளித்த விளக்கத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு ஏதும் நடத்தவில்லை, அவர் சொல்வது போல் அவரது வீடு உள்ளிட்ட எந்த இடத்திலும் சோதனை நடத்தவில்லை.

தென் தமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு செல்ல முடியாமல் தடுப்பதாக செல்வப்பெருந்தகை கூறுவது உண்மை இல்லை என தெரிவித்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செல்வப்பெருந்தகை வீட்டில் காலை முதல் ஐடி ரெய்டு நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் ரெய்டு நடத்தி தன்னை ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்கு செல்லவிடாமல் முடக்க பார்க்கிறார்கள் என செல்வப்பெருந்தகை , மத்திய அரசை குற்றம்சாட்டி ஒரு பதிவு போட்டிருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஒரு முக்கியமான தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக இன்று தமிழகம் வருகை தந்துள்ள நிலையில், வருமான வரித்துறையினர் இந்தி பேசும் அதிகாரிகளைக் கொண்டு 'சோதனை' என்ற பெயரில், ஸ்ரீபெரும்புதூர் சட்டசபைத் தொகுதிக்குள் என்னை சட்டவிரோதமாக முடக்கினர்.
இதன் மூலம் நான் எனது அரசியல் கடமைகளை ஆற்றுவதையும், மக்களைச் சந்திப்பதையும் அவர்கள் தடுத்துள்ளனர். அரசியல் ரீதியாக மிக முக்கியமான தருணத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டமிட்ட நடவடிக்கை, ஜனநாயக செயல்பாடுகளைத் தடுப்பதற்கும், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை முடக்குவதற்குமான ஒரு முயற்சியாகும்.
இந்த சோதனையின் பின்னணியில் உள்ள நேரம், அதன் உண்மையான நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது - இது சட்ட அமலாக்கம் அல்ல, மாறாக அச்சுறுத்தல் ஆகும். எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே அச்ச உணர்வை உருவாக்கவும், கருத்து வேறுபாடுகளை ஒடுக்கவும், அரசியல் பங்களிப்பைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு, முகமைகளை அரசியல் அழுத்தக் கருவிகளாகப் பயன்படுத்தும் ஒரு கவலையளிக்கும் போக்கை இது பிரதிபலிக்கிறது.
அதிகாரத்தைத் தன்னிச்சையாகத் தவறாகப் பயன்படுத்துவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்கள் மீதான தாக்குதலாகும். சுதந்திரமான நடமாட்டம், பேச்சுரிமை மற்றும் நேர்மையான அரசியல் ஈடுபாடு ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஜனநாயகத்தில், சட்டத்தைக் காக்க வேண்டிய நிறுவனங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தப்படும்போது, அது பொதுமக்களின் நம்பிக்கையைச் சிதைத்து நமது ஜனநாயக அமைப்பின் நேர்மையைச் சீரழிக்கிறது.
அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகக் குரல்களை ஒடுக்கும் இதுபோன்ற முயற்சிகளுக்கு எதிராக உறுதியுடன் நிற்பேன் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். எந்தவிதமான அச்சுறுத்தலும் மக்களுக்குச் சேவை செய்யும் எங்களது கடமையிலிருந்தும், நீதி, நேர்மை மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதிலிருந்தும் எங்களைப் பின்வாங்கச் செய்ய முடியாது." இவ்வாறு செல்வப்பெருந்தகை கண்டனத்தை தெரிவித்துள்ளார். செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் ரெய்டு என சொல்லும் நிலையில் வருமான வரித் துறையோ ரெய்டு எதுவும் நடத்தவில்லை என விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications