“மெஜாரிட்டி எண்ணிக்கையுடன் யாரும் வராவிட்டால் மறுதேர்தல் வருமா?” ஆளுநர் அர்லேகர் சொன்ன பதில்!
சென்னை: தவெக தலைவர் விஜய்யி ஆட்சி அமைக்க அழைக்காத விவகாரத்தில், எஸ்.ஆர். பொம்மை வழக்கு தொடர்பாக பேசியுள்ளார் தமிழக ஆளுநர் அர்லேகர். மெஜாரிட்டி எண்ணிக்கை இல்லாத ஒருவரை அழைத்து ஆட்சி அமைக்க என்னால் சொல்ல முடியாது என திட்டவட்டமாகக் கூறியுள்ளார் ஆளுநர் அர்லேகர்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. எனினும் பெரும்பான்மை கிடைக்காததால் உடனடியாக ஆட்சியமைக்க முடியாத சூழல் உள்ளது.

அடுத்தடுத்து ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய் உரிமை கோரிய போதிலும், பெரும்பான்மை ஆதரவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஆளுநர் கூறியுள்ளார். இதனால் ஆட்சியமைக்க முடியாமல் விஜய் திணறி வருகிறார்.
இந்நிலையில், விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்காதது பற்றிய கேள்விகளுக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதில் அளித்துள்ளார். ரிபப்ளிக் டிவி-யின் அர்னாப் கோஸ்வாமி உடனான தொலைபேசி உரையாடலில் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் ஆளுநர் அர்லேகர்.
அர்னாப் கோஸ்வாமி: தேர்தல் முடிவுகள் வந்து பல நாட்கள் ஆகிவிட்டன. 118 என்ற மெஜாரிட்டி எண்ணிக்கையுள்ள ஒரு கட்சி வரும் வரை நீங்கள் எவ்வளவு காலம் காத்திருப்பீர்கள்?
ஆளுநர்: நான் அடுத்த நாளே பதவியேற்பு நடத்தத் தயாராக இருந்தேன். ஆனால் சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை. இன்று எனக்குத் தேவையான எண்ணிக்கை கிடைத்தால் நாளைக்கே நான் பதவியேற்பு நடத்தத் தயார்.
கேள்வி: அடுத்த 2-3 நாட்களுக்கு யாரும் ஆட்சி அமைக்க உரிமைகோர வராவிட்டால் என்ன நடக்கும்?
ஆளுநர்: அப்போது என்னிடம் உள்ள மற்ற ஆப்ஷன்களை பார்க்க வேண்டும்.
கேள்வி: எஸ்.ஆர். பொம்மை வழக்கில், பெரும்பான்மையைச் சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே?
ஆளுநர்: முற்றிலும் உண்மை. ஆனால் பொம்மை வழக்கு என்பது வேறு. இது தேர்தலுக்குப் பிந்தைய புதிய அரசு அமைக்கும் முறை. இங்கே நான் குறைந்தபட்சம் மெஜாரிட்டி யாரிடம் இருக்கிறது என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
கேள்வி: ஆட்சி அமைக்க காலம் தாழ்த்துவது 'குதிரை பேரம்' நடக்க வழிவகுக்காதா?
ஆளுநர்: குதிரை பேரம் நடப்பது குறித்து எனக்கு மிகுந்த கவலை உள்ளது. அதனால்தான் இதை விரைவில் முடிக்க விரும்புகிறேன். ஆனால் மெஜாரிட்டி எண்ணிக்கை இல்லாத ஒருவரை அழைத்து ஆட்சி அமைக்க என்னால் சொல்ல முடியாது. அது நம் மாநில மக்களுக்கே பாதிப்பாக முடியும்.
கேள்வி: நீங்கள் விஜய் ஆட்சி அமைப்பதைத் தடுக்க முயல்கிறீர்களா?
ஆளுநர்: நான் யாரையும் தடுக்கவில்லை. ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எவரையும் நான் தடுக்க மாட்டேன், அவர்களை ஊக்குவிக்கவே செய்வேன்.
கேள்வி: யாரும் மெஜாரிட்டி எண்ணிக்கையுடன் ஆட்சியமைக்க வராவிட்டால் மறுதேர்தல் வருமா?
ஆளுநர்: உச்சநீதிமன்றத்தின் 2019 மற்றும் ஜார்க்கண்ட் வழக்குகளின் தீர்ப்புகளைப் பாருங்கள். சட்டசபையிலேயே எல்லாம் முடிவாகும். என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை நான் ஆய்வு செய்வேன்.
கேள்வி: யாரும் உரிமை கோரவில்லை என்றால், விஜய் 118 இடங்களை நிரூபிக்க முடியாவிட்டால், சிறுபான்மை அரசைப் பதவியேற்க வைப்பதுதான் ஒரே வழியா?
ஆளுநர்: நான் விஜய்யிடம் எல்லோரையும் அழைத்து வரச் சொல்லவில்லை. 108 + 5 + 6 = 118 என்பது போன்ற ஆதரவுக் கடிதங்களைக் கொடுத்தால் போதும், அதை நான் சரிபார்ப்பேன். ஆனால், ஒரு கட்சியிடம் மெஜாரிட்டி இல்லை என்று தெரிந்தே அவர்களைப் பதவியேற்கச் செய்து, பின் அவர்களைக் குதிரை பேரம் செய்ய நான் அனுமதிக்க முடியாது. அது எனக்கு உடன்பாடானது அல்ல.
கேள்வி: அடுத்த வாரம் திங்கள் வரை யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்றால் என்ன நடக்கும்? சட்ட ஆலோசகர்களை நாடுகிறீர்களா?
ஆளுநர்: நிச்சயமாக. சட்ட வல்லுநர்கள் எனக்கு வழிகாட்டுவார்கள். என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்று பார்த்து அதற்கேற்ப முடிவெடுப்பேன். இவ்வாறு ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications