ஆறுதல் தரும் மா.சுப்பிரமணியன் பேட்டி.. தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை தொற்று இல்லையாம்
சென்னை: தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
Recommended Video
குரங்கம்மை நோய் உலகம் முழுவதும் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவிலும் கடந்த சில மாதங்களாக குரங்கம்மை தொற்று குறித்து மத்திய மற்றும் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சகங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தன.

கேரளாவில் பாதிப்பு
இதுவரை இந்தியாவில் குரங்கு அம்மை நோயால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், கடந்த 14 ஆம் தேதி இந்தியாவிலேயே முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். கடந்த 12 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என அவர் கூறி இருக்கிறார்.

மத்திய குழு
கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளதை தொடர்ந்து அம்மாநிலத்துக்கு மத்திய சுகாதாரத்துறை குழு விரைந்தது குரங்கு அம்மை தொடர்பான வழிகாட்டுதலை வழங்கும் அந்த குழு, குரங்கு அம்மை தடுப்பில் கேரள அரசுடன் இணைந்து பணியாற்றும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மாநிலங்களுக்கு கடிதம்
இதனை தொடர்ந்து குரங்கு அம்மை தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் வழிகாட்டு நெறிகளுடன் கூடிய கடிதத்தை மத்திய சுகாதாரத்துறை அனுப்பியது. அதில், குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய வேண்டும். குரங்கு அம்மை பாதிப்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், நோய்க்கான அறிகுறி இருந்தால் இணை நோய் இருப்பவர்கள் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

டெல்லியில் ஒருவருக்கு பாதிப்பு
குரங்கு அம்மை நோய்க்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கான மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 31 வயது இளைஞருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர் டெல்லி மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டில் என்ன நிலை?
இந்த நிலையில் சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் குரங்கு அம்மை தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. குரங்கு அம்மை பரவலை தடுக்க கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக விமான நிலையங்களில் கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டு இருக்கின்றன." என்றார்.












Click it and Unblock the Notifications