இ பாஸ் கிடைக்காமல் கல்லூரி மாணவர்கள் அவதிப்படுகிறார்கள்.. இப்படி செய்யுங்களேன்- டிடிவி தினகரன் ஐடியா
சென்னை: கல்லூரி மாணவர்கள் இ- பாஸ் நடைமுறையால் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள் என்பதால், மதிப்பெண் சான்றிதழை காட்டினால் மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என விதிமுறையை மாற்ற வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாவட்டங்களிடையே இ பாஸ் நடைமுறை உள்ளது. இதை நீக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், என்றும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
அதேநேரம், அரசு இ பாஸ் நடைமுறையை தொடருவதில் உறுதியாக உள்ளது. இந்த நிலையில்தான், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து டிடிவி தினகரன் ட்வீட் வெளியிட்டார்.

இ பாஸ்
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியுள்ளதாவது: கல்லூரி சேர்க்கை தொடர்பான பணிகளுக்காக, தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கும், சென்னைக்கு வருவதற்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தற்போதுள்ள இ- பாஸ் நடைமுறையால் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கிறார்கள்.

கல்லூரி மாணவர்கள்
இதற்காக இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த பலரின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதால்,அவர்கள் கல்லூரியில் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே,மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவற்றை காட்டினாலே போதும்; மாணவருக்கும், அவருடன் வருபவருக்கும் இ-பாஸ் தேவையில்லை என முதல்வர் உடனடியாக அறிவிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய பிரச்னையில் அரசு இனியும் காலதாமதம் செய்வதோ; அலட்சியம் காட்டுவதோ கூடாது. டிடிவி தினகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினம்
மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு, டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பெருமை மிகுந்த நம் நாட்டின் 74வது சுதந்திர தினத்தில் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். நாம் இன்றைக்கு சுதந்திரக்காற்றைச் சுவாசிப்பதற்காக தங்களுடைய சுக, துக்கங்களை மறந்து போராடி, அதனால் எண்ணிலடங்காத துயரங்களைச் சந்தித்த மாவீரர்களையும், மாபெரும் தியாகிகளையும் இந்நாளில் நெஞ்சம் நிறைந்த நன்றியோடு நினைத்து வணங்கிடுவோம்.

ஜனநாயக கடமை
அத்துடன் நம் மூதாதையர் உயிர், உடல், பொருள் எல்லாம் இழந்து பெற்றுத்தந்த சுதந்திரத்தைப் பேணிக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதையும் மறந்துவிடக்கூடாது. விடுதலையின் அடிநாதமான ஜனநாயகத்தைச் சேதாரமின்றி காப்பாற்ற வேண்டியது நம் கடமையாகும். அதிலும் விடுதலைக்காக முதல் அடி எடுத்து வைத்து இந்தியாவுக்கே வழிகாட்டிய சிறப்புமிக்க தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் அந்தக் கடமை கூடுதலாகவே இருக்கிறது. ஏனெனில், வெவ்வேறு இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் கொண்ட இந்திய தேசத்தின் உயிரோட்டமே அதன் ஜனநாயகத்தில்தான் அடங்கியிருக்கிறது.
"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற எண்ணத்தோடு ஜனநாயகத்தின் பாதையில் பயணித்து, அனைத்து தரப்பு மக்களும் சமூக மற்றும் பொருளாதார ரீதியிலும் சமத்துவம் பெறுவதற்கு ஒன்றுபட்டு உழைத்திடுவோம். ஒரு தமிழனாக நம்முடைய தனித்துவமான உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், இந்தியனாக உலக அரங்கில் தலைநிமிர்ந்து நின்றிடவும் இந்த சுதந்திரத் திருநாளில் உறுதி ஏற்றிடுவோம். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications