ஒற்றை மொழி தேசம் தேவையில்லை.. அமித்ஷா காலில் விழுந்து கிடக்கும் பழனிசாமி.. ராகுல் காந்தி ஆவேசம்
சென்னை: ஒரு மொழிதான் பெரிது, ஒரு கலாசாரம் தான் பெரிது என்று சொல்லும் இந்தியா தேவையில்லை என்று கூறிய ராகுல் காந்தி, அமித்ஷா காலில் முதல்வர் பழனிசாமி விழுந்து கிடைப்பதைப் பார்த்தால் கோபம் வருவதாக ஆவேசமாகப் பேசினார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்களும் தமிழ்நாட்டில் தங்கள் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி, இன்று காலை அடையாறில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார்.

முதல்வர் மீது தாக்கு
அப்போது அவர் முதல்வர் பழனிசாமியை கடுமையாகத் தாக்கி பேசினார். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் எந்த தமிழனும் மண்டியிட்டது இல்லை என்று கூறிய ராகுல் காந்தி, அமித்ஷா காலில் முதல்வர் பழனிசாமி விழுந்து கிடைப்பதைப் பார்த்தால் கோபம் வருவதாக ஆவேசமாகப் பேசினார். இந்தத் தேர்தலில் அதிமுக, ஆர்.எஸ்.எஸ், பாஜக, மோடி அணிக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு தமிழ்நாடுதான் மையப்புள்ளி
ஒரு மொழிதான் பெரிது, ஒரு கலாசாரம் தான் பெரிது என்று சொல்லும் இந்தியா தேவையில்லை என்றும் தமிழ், வங்காளம் என அனைத்து மொழிகளின் பொறுமையைச் சேர்த்ததுதான் இந்தியா என்றும் ராகுல் காந்தி பேசினார். தமிழ்நாடு இல்லாமல் இந்தியா என்பது இல்லை என்பதை மத்திய அரசில் இருப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்த ராகுல், இந்தியாவை ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாகத் தமிழ்நாடு உள்ளது என்றார்.

பேரன்பு காட்டக் கூடியவர்கள்
அன்பு காட்டினால் பேரன்பு காட்டக் கூடியவர்கள் தமிழர்கள் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். மேலும் தமிழ் பாரம்பரியத்தை ஆர்எஸ்எஸ் - பாஜக அழிக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அதேநேரம் தமிழ்நாட்டிற்கு தற்போதைய சூழ்நிலையில் தேவையான மாற்றத்தை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரே மேடையில் பிரசாரம்
மேலும், நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ், பாஜக வேரறுக்கப்படும் என்றும் அவர் ஆவேசமாகப் பேசினார். காலை அடையாறில் பிரசாரம் செய்யும் ராகுல் காந்தி, மாலை சேலம் செல்கிறார். அங்கு திமுக தலைவர் ஸ்டாலினும் ராகுல் காந்தியும் ஒரே மேடையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கின்றனர். இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications