மே 1 பொது விடுமுறை...முழு ஊரடங்கு அவசியமில்லை - ஹைகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்
மே 1ஆம் தேதி சனிக்கிழமையன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: மே 1ஆம் தேதி முழு ஊரடங்கு போடுவதற்கான அவசியம் எழவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இருப்பதால் முழு ஊரடங்கு போடுவது சாத்தியமில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள், ஆக்சிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசி, மருத்துவமனை படுக்கைகள் குறித்து தாமாக வழக்குப் பதிந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இரு தினங்களுக்கு முன் இந்த வழக்கு விசாரணையில் தேவைப்பட்டால் மே 1 மற்றும் மே 2ஆம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கலாம் என பரிந்துரைத்தது. இந்த மனுவானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மே 2ஆம் தேதி ஏற்கெனவே முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை பணிகளை மேற்கொள்பவர்கள் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவார்கள். மே 1ஆம் தேதி முழு ஊரடங்கு போடுவதற்கான அவசியம் எழவில்லை என்று தெரிவித்தார்.
ஏனென்றால் அன்றைய தினம் பொது விடுமுறை என்பதால் பெரும்பாலும் மக்கள் நெருக்கடி இருக்காது. அதேபோல மே 1ஆம் தேதி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இருப்பதால் முழு ஊரடங்கு போடுவது சாத்தியமில்லை என்றும் கூறினார்.
இதையடுத்து இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்க தமிழ்நாடு அரசுக்கு நாளை வரை அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்துள்ளது. வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தடை செய்யப்பட்டிருப்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லாமல் வெளிவந்தால் கடும் நடவடிக்கை பாயும் என அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications