"தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக புதிய சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவில்லை" மா.சுப்பிரமணியன்!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக புதிய சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அரசின் கொள்கைப்படி ஒர் ஊராட்சி ஒன்றியத்தில் 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், 50,000 மக்கள் தொகைக்கு ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் அமைக்கப்படும்.

6 ஆண்டுகள்
கடந்த 6 ஆண்டுகளாக புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏதும் தோற்றுவிக்கப்படவில்லை. சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்துவது, பொது மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவது அத்தியாவசியமாகிறது. சட்டமன்ற அறிவிப்புகள் எண்.33 மற்றும் எண்.44ன் படி, ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவுள்ள்ளது.

50 புதிய சுகாதார நிலையங்கள்
அதன்படி, கிராமப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய அரசு ஆரம்ப நிலையங்களும், நகர்ப்புற மக்களின் சுகாதார தேவைகளை மேம்படுத்தும் பொருட்டு 25 புதிய நகர்ப்புற அரசு சுகாதார நிலையங்கள் நிறுவப்படும். இது தொடர்பாக மாவட்ட அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ரூ.120 கோடியில் திட்டம்
அதேபோல் கிராமப்புறத்தில் புதிய அரசு சுகாதார நிலையங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.63 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டப்படும். மேலும் இதற்கு தேவையான மனிதவளம், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆண்டிற்கு ரூ.57 கோடி செலவில் வழங்கப்படும்.

மத்திய அரசு பங்கு என்ன?
இதற்கான மொத்த செலவினம் ரூ.120 கோடியாகும். இதில் மாநில அரசின் நிதி பங்கீடு 40%, மத்திய அரசின் பங்கீடு 60% ஆகும். நடைமுறையில் ஏற்கெனவே இயங்கி வரும் மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்கள் போல மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு புதிய அரசு ஆரம்ப நிலையங்கள் இயங்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications