நடிகர் விஜய் ப்ளீஸ் உஷார்.. பிரேமலதா விஜயகாந்த் எச்சரிக்கை!
சென்னை: விஜயகாந்த் போல வர நினைத்தால் மோசமான விளைவுகள்தான் ஏற்படும் என்று நடிகர் விஜயின் அரசியல் திட்டம் குறித்த கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த் காட்டமாக கூறியுள்ளார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் எம்.பியாக வெற்றி பெற்றவர்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள். வெறும் எம்பிக்களாக டெல்லிக்கு போகிறார்கள்.. வருகிறார்கள்.. அவ்வளவு தான். தமிழ்நாட்டிற்கு வேண்டிய உரிமையை இதுவரைக்கும் இரண்டு கழகங்களும் பெற்று தரவில்லை என்பதை உறுதியாக பதிய வைக்க விரும்புகிறோம்.

இன்றைக்கு எத்தனையோ பிரச்சினைகள் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. ஊழல், கள்ளச்சாராயம், எங்கு பார்த்தாலும் போதை என தமிழகம் போதை தமிழகமாக மாறியிருக்கிறது. லஞ்ச ஊழல் தலை விரித்தாடுகிறது. எல்லா பக்கமும் கனிமவளம் கொள்ளையடிக்கப்படுகிறது. வெறுமன ரெய்டு மட்டும் நடக்கிறது. ரெய்டுக்கு அப்புறமும் என்ன என்பதை மக்களுக்கு புரிய வைப்பதில்லை.
வெறும் தேர்தலுக்கான ஒரு ஆட்சியும்.. தேர்தலுக்காக ஒரு அரசியல் என்று மட்டும் இல்லாமல்.. நம்பி வாக்களித்த மக்களுக்கு வெற்றி பெற்றவர்கள் உறுதியாக என்ன வாக்குறுதிகள் கொடுத்தார்களோ.. அதை நிறைவேற்றும் ஒரு அரசாங்கம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். எதிர்க்கட்சிகள், ஏற்கனவே இருந்த பெயரை மாற்றிவிட்டு இந்தியா என்று மாற்றியிருக்கிறார்கள்.. பெயர்கள் வேண்டும் என்றால் மாறலாம்.. மக்கள் நிலையில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.
இந்தியா என்று கூட்டணிக்கு பெயர் வைத்தாலும் அந்த கூட்டணி கட்சி தலைவர்களுக்குள்ளே ஆயிரம் முரண்பாடுகள் இருக்கிறது. இதனால் இந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெறுமா என்பதை தேர்தல் முடிவுக்கு பின்னர் தான் தெரியும். டெல்டா பகுதிகளில் இன்றைக்கு ஐந்தரை லட்சம் ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் விட்டு இருக்க வேண்டும். ஆனால் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் கூட இந்த தமிழக அரசால் பெற்று தர முடியவில்லை. தமிழகம் ஏற்கனவே விவசாய பூமி. ஆனால் இன்று தண்ணீர் இன்றி வறட்சியாக இருக்கிறது.
இந்த நிலைமை வருங்காலத்தில் இன்னும் மோசமாகும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. விலைவாசி உயர்வுக்கு காரணம் என்ன, உண்மையாக மக்களுக்கு தீர்வு காண வேண்டிய அரசு மற்றவர்கள் மீது குறை சொல்லி.. மற்றவர்கள் மீது பழி போட்டு தப்பித்துக்கொள்ள தான் நினைக்கிறார்களே தவிர.. அந்த பிரச்சினைகளை தீர்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா கூறியதாவது:-
அரசியல் என்பது வேறு.. சினிமா என்பது வேறு.. விஜய் மாணவர்களுக்கு உதவி செய்வது நல்ல விஷயம். விஜய் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். அவர் சொல்வதற்கு முன்பாக அதைப்பற்றி பேசுவது சரியாக இருக்காது" என்றார். விஜயகாந்தை ஆரம்ப கட்டத்தில் செய்தது போலவே விஜயும் மாணவர்களுக்கு உதவி செய்து அதே பாணியை பின்பற்றுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற ரீதியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-
"எதையுமே எதிர்பார்க்காமல் தன்னால் முடிந்ததை மக்களுக்கு செய்த ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டும்தான். அதனால் விஜயகாந்த் மாதிரி நாம் என்று யாராவது நினைத்தால் அதனுடைய விளைவு மிக மோசமானதாக இருக்கும். விஜயகாந்தை பார்த்து மக்களுக்கு நல்லது செய்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் விஜயகாந்த் மாதிரி வர முடியுமா என்பது ஒரு மில்லியன் கேள்வி... விஜயகாந்தின் வாழ்க்கை ஒரு சரித்திரம். அதனால் பொறுத்து இருந்து பார்ப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications