"இது அரசியல்.. யாரும் புனிதர் இல்லை.. நாங்கள் சங்கர மடமா நடத்துகிறோம்?" கே.என் நேரு சரமாரி கேள்வி
புனிதராக இருந்தால் வாயில் வெண்ணெய் தடவி படுக்க வைத்துவிடுவீர்கள் என கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை: என் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 19 வழக்கு போட்டீர்கள் அதை எல்லாம் தாண்டி தான் அமைச்சராக இருக்கிறேன் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். அரசியலில் யாரும் புனிதரல்ல எனவும் புனிதராக இருந்தால் வாயில் வெண்ணெய் தடவி படுக்கப்போட்டு போயிருப்பீர்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலைப்பட்டியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
திமுக பொருளாளரும், திமுக லோக்சபா தலைவருமான டி.ஆர்.பாலு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு எதிர்கட்சியினரை கடுமையாக சாடினார்.

ரூ.100 கோடி சம்பாதித்தேனா?
ஓர் ஆண்டில் நேரு 100 கோடி ரூபாய் சம்பாதித்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள். நான் அவ்வாறு சம்பாதிக்கவில்லை, அப்படி சம்பாதித்தால் அது மக்களுக்காகத் தான் செலவழிக்கப்படும். முடிந்தால் உங்களுடைய கட்சி பிரச்சனையைத் தீர்த்துவிட்டு எங்களிடம் வந்து பேசுங்கள், முடிந்தால் வழக்குப் போட்டு எங்களை உள்ளே தள்ளுங்கள். என் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 19 வழக்கு போட்டீர்கள், அதை எல்லாம் தாண்டி தான் அமைச்சராக உள்ளோம்.

சங்கர மடமா நடத்துறோம்
நேரு மனிதர். புனிதர் அல்ல என்று கூறினீர்கள். புனிதராக இருந்தால் வாயில் வெண்ணெய் தடவி படுக்கப்போட்டு போயிருப்பீர்கள். நாங்கள் என்ன சங்கர மடமா நடத்துகிறோம். நாங்கள் நடத்துவது அரசியல் தான். நீங்கள் கூறுவதற்கு எதிர்க்கும் நிலையில் தான் நாங்கள் இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் ஆளும் கட்சி.

5 லட்சம் கோடி கடன் சுமை
என்னை நீதிமன்றத்தில் சந்திக்கிறோம் என்கிறார்கள். ஏற்கனவே என் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 19 வழக்குகள் பதியப்பட்டது. அதிலிருந்து வெளியே வந்துள்ளோம். திமுக அரசு பொறுப்பேற்றபோது 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நான்கு மாதங்கள் கொரோனா, அதன் பின்பு வெள்ளம், அதன் பின்பு சட்டசபைக் கூட்டத்தொடர் இருந்தது. மீதமிருந்த சில மாதங்களில் தான் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

நேர்மையாக பணியாற்றுவோம்
திருச்சி மாவட்டத்தில் மட்டும் 850 கோடியில் புதிய பேருந்து முனையம், 120 கோடி ரூபாயில் கூட்டு குடிநீர் திட்டம், தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெறுகிறது. இது போன்ற எண்ணற்ற பணிகளை செய்து வருகிறோம். திருச்சி மாவட்டம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி பெறும். சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சி என்கிற நிலைக்கு மாவட்டத்தை உயர்த்துவோம். நாங்கள் நிச்சயம் நேர்மையாக தான் பணியாற்றுவோம், எந்த தவறும் செய்ய மாட்டோம் என உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications