ரத்தத்தில இருந்து பிளாஸ்மாவை பிரிச்சிட்டு மறுபடியும் ரத்தத்தை ஏத்திட்டாங்க - சதன் பிரபாகர் எம்எல்ஏ
பிளாஸ்மா தானம் செய்வதனால் கொஞ்சம் கூட வலியோ, சோர்வு எதுவும் இல்லை என்கிறார் பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர்.
சென்னை: நம்ம உடம்புல இருந்து ரத்தத்தை எடுத்து மெஷின்ல பிளாஸ்மாவ பிரிச்சு எடுத்துட்டு திருப்பியும் அந்த ரத்தத்தை உடம்புல ஏத்திட்டாங்க. கொஞ்சம் கூட வலியோ சோர்வோ இல்ல,ரொம்ப நல்லா இருக்கேன். மறுபடியும் 14 நாட்கள் கழித்து வந்து பிளாஸ்மா தானம் கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார் பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்ட பிளாஸ்மா வங்கியில் இன்று எம்.எல்.ஏ சதன் பிரபாகர் பிளாஸ்மா தானம் செய்த பின்னர் அனைவருக்கும் நம்பிக்கை தரும் வகையில் பேட்டி கொடுத்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது பிளாஸ்மா சிகிச்சை. தமிழ்நாட்டில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது. பிளாஸ்மா சிகிச்சை முறையில், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த நபரிடம் இருந்து பெற்றப்பட்ட பிளாஸ்மா கொரோனா வைரஸ் நோயாளிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனா நோயில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மாவை தானமாக கொடுக்கலாம். கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு இன்னும் தொற்று இல்லை என பரிசோதனை முடிவு பெறப்பட்டு நாளிலிருந்து 14வது நாள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்டு அதிக மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை கொடுப்பதன் மூலம் குணப்படுத்தலாம்.
தமிழகத்தில் முதல் முறையாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு முதல் நபராக ப்ளாஸ்மா தானம் செய்துள்ளார் பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தாக்கியதால் சிகிச்சை பெற்று அந்த பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமடைந்திருக்கிறார் சதன் பிரபாகர்.
பிளாஸ்மா தானம் செய்த அனுபவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவிலிருந்து குணமாகி வந்து விட்டேன். பிளாஸ்மா தானம் பற்றி கேள்விப்பட்டு நானும் கொடுக்க வேண்டுமென்ற ஆசையில் வந்தேன் என்று கூறினார்.
காலமானார் 10 ரூபாய் டாக்டர்...வில்லிவாக்கம் மக்கள் சோகம்!!
ரத்ததானம் கொடுக்கும்போது எப்படி இருக்குமோ அதே மாதிரிதான் இருந்தது. நம்ம உடம்புல இருந்து ரத்தத்தை எடுத்து மெஷின்ல பிளாஸ்மாவ பிரிச்சு எடுத்துட்டு திருப்பியும் அந்த ரத்தத்தை உடம்புல ஏத்திட்டாங்க. கொஞ்சம் கூட வலியோ சோர்வோ இல்ல,ரொம்ப நல்லா இருக்கேன். இன்னும் அடுத்த 14 நாள் கழித்து மீண்டும் பிளாஸ்மா தானம் பண்ணலாம்னு இருக்கேன் என்று நம்பிக்கை தரும் வார்த்தைகளை கூறியுள்ளார். இவரைப்போல கொரோனாவில் இருந்து மீண்ட பலரும் பிளாஸ்மா தானம் கொடுக்க முன்வரவேண்டும். இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பல உயிர்களைக் காப்பாற்றலாம்.