பயப்படாதீங்க.. சென்னை மக்கள் அனைவருக்கும் பால் நாளையும் கண்டிப்பா கிடைக்கும்.. உறுதியளித்த அமைச்சர்!
சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், நாளை பால் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்தில் அதிக அளவில் பால் வாங்கி வருகின்றனர். இந்நிலையில், பால் கொள்முதல் சிக்கல் இல்லாமல் நடப்பதாகவும், அனைத்து இடங்களிலும் பால் விநியோகம் தடையின்றி நடக்கும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதிபடக் கூறியுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படைத் தேவையான பால் பெரும்பாலான இடங்களில் கிடைக்கவில்லை. மழையால் உணவு கிடைக்காத நிலையில் பால் மட்டுமே பசியைப் போக்கும் தீர்வாக உள்ளது. குறிப்பாக குழந்தைகள் உள்ள குடும்பங்களில் பால் தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது. இந்நிலையில், பால் கிடைக்காமல் பலர் அவதிப்பட்டனர்.

ஒரு சில இடங்களில் பால் கிடைத்தாலும் ரூ.25 மதிப்புள்ள பால் பாக்கெட் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில், நாளை பால் கிடைக்காதோ என்ற அச்சத்தில் பலர், தேவைக்கு அதிகமாக பால் வாங்கி வைப்பதாகவும், அப்படியான அச்சம் தேவையில்லை என்றும், பால் விநியோகத்தில் எந்த தடையும் இருக்காது என்றும் உறுதி அளித்துள்ளார் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், பால் விநியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று முதல் பால் விநியோகம் முழுவதும் சீரமைந்துள்ளது. வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் பல்வேறு பாதிப்புகள் பால் உற்பத்தியிலும், விநியோகத்திலும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்த நிலையில் பால் வாகன போக்குவரத்து மிகப்பெரிய சவாலாக உள்ளது. சென்னை மாநகரைப் பொறுத்த வரையில் இங்கு தேவைப்பட்டாலும் வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு சென்னை அம்பத்தூர், சோழிங்கநல்லூர், மாதவரம் பால் பண்ணைகளில் பதப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
தனியார் பால் நிறுவனங்களை பொறுத்த வரையில் அவர்களும் வெளி மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு பால் கொண்டு வருவது வழக்கம். சென்னை பெருநகர பகுதிக்கு உட்பட்ட இடங்களில் கால்நடை இல்லாத காரணத்தினால் பால் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இந்த சூழ்நிலையில் தான் இரண்டு நாட்கள் ஆவின், தனியார் பால் விநியோகஸ்தர்கள் கூட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பால் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிட்டது. அதிலும் குறிப்பாக அம்பத்தூரில் பால் பண்ணைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தது. அதனால் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு பால் வினியோகத்தை சீரமைத்து இன்றைக்கு ஓரளவுக்கு பால் விநியோகிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பால் தேவையில் இடைவெளி ஏற்படாமல் தவிர்ப்பதற்கு பால் பவுடர் விநியோகமும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் பால் தொடர்ந்து கிடைக்காதோ என்ற அச்சத்தில் அதிகமான பால் வாங்கும் நிலை உள்ளது. அதை தவிர்க்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
மேலும், பால் தட்டுப்பாடு காரணமாக அரை லிட்டர் பால் பாக்கெட் ரூ.100க்கு விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், அது குறித்து ட்விட்டரில் பதிலளித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "ஆவின் பால் பவுடர் போதிய அளவு கையிருப்பு உள்ளது. எனவே ஆவின் முகவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உடனடியாக தேவையான அளவு கொள்முதல் செய்து மக்களுக்கு தடையின்றி விற்பனை செய்ய வேண்டும். பால் சென்றடைய முடியாத இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications