மவுண்ட்பேட்டனிடம் செங்கோல்.. ஆதாரம் இல்லை! அரசு நீதி தவறினால் தண்டிக்கும் - திருவாவடுதுறை ஆதீனம்
சென்னை: மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் செங்கோல் கொடுத்து பெறப்பட்டதற்கான பதிவுகள், புகைப்படங்கள் ஆதீன மடத்திடம் இல்லை என திருவாவடுதுறை ஆதீனம் விளக்கமளித்து உள்ளார்.
இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தை நாளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருக்கிறார். இதில் சோழர்களின் வழிப்படி, திருவாவடுதுறை ஆதீனம் இந்தியா சுதந்திரம் பெற்றப்போது நேருவிடம் வழங்கிய செங்கோல் வைக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த செங்கோலை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்குவதற்காக தமிழ்நாடு ஆதீனங்கள் நேற்று டெல்லிக்கு புறப்பட்டனர். இதற்கிடையே செங்கோல் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களும், விமர்சனங்களும் வெளியாகின. எதிர்க்கட்சிகளும் மன்னராட்சியின் அடையாளமாக இருந்த செங்கோலை பயன்படுத்துவதா என்று கேள்வி எழுப்பினார்கள்.
இந்த நிலையில் நேற்று சென்னை அரும்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிய பரமாசாரிய சுவாமிகள், "1947 ஆம் ஆண்டு ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் செங்கோல் வழங்கப்பட்டது உண்மை. ராஜாஜியின் அழைப்பை ஏற்று ஆதீனம் சடங்கு செய்ததற்கு சான்று உள்ளன.
நேருவிடம் செங்கோல் வழங்கப்பட்டதற்கான சான்றுகளாக நேரு அதை வைத்து இருக்கும் புகைப்படங்கள் ஆதீனத்தின் புத்தகத்தில் உள்ளன. கடந்த 75 ஆண்டுகளாக கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட இருக்கிறது. அரசியல் லாபத்துக்காக சடங்குகளை பொய் என்றும் போலி எனவும் கூறுவது வருத்தம் தருகிறது.
28 ஆம் ஆண்டு நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது தேவாரம் பாடப்படுமா என்பது அப்போதுதான் தெரியும். நீதி மாறாமல் அரசு ஆட்சி செய்வதற்காக செங்கோல் வழங்கப்படுகிறது. நீதியுடன் ஆட்சி செய்யாவிட்டால் நிச்சயம் செங்கோல் தண்டிக்கும்." என்று தெரிவித்தார். அப்போது செய்தியாளர்கள் மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் கொடுத்த வாங்கப்பட்டதற்கு சான்றுகள் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த திருவாவடுதுறை ஆதீனம், "செங்கோல் மவுண்ட்பேட்டனிடம் கொடுத்து வாங்கப்பட்டதற்கான பதிவுகளோ புகைப்படங்களோ மடத்திடம் கிடையாது. நேரில் பார்த்தேன் என்று சொல்ல முடியாதே. அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்களிடம் கேட்டால் மட்டுமே தெரியும். செங்கோல் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் நிகழ்வு எப்போது எங்கு நடந்தது என்று எனக்கு தெரியாது." என்றார்.












Click it and Unblock the Notifications