கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை- பாஜக மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்டாக்
சென்னை: தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளை சுட்டுப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம் என்று பாஜகவினரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.
தேசப் பிதா மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட 75-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்துத்துவா தீவிரவாதியான நாதுராம் கோட்சேவால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

கோட்சே ஆதரவு
இப்போது நாதுராம் கோட்சேவுக்கு ஆதரவாக பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அண்மையில் சத்தீஸ்கரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிரா சாமியார் காளிசரண் மகாராஜ், காந்தியடிகளை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவுக்கு என் வீரவணக்கங்கள், நாதுராம் கோட்சேதான் உண்மையான மகாத்மா என பேசியது சர்ச்சையானது. இதனையடுத்து காளிசரண் மகாராஜ் மீது சத்தீஸ்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்தது. மேலும் ம.பி.யில் தலைமறைவாக பதுங்கி இருந்த காளிசரண் மகாராஜையும் கைது செய்தது சத்தீஸ்கர் போலீஸ்.

சென்னையில் அரசு மரியாதை
இதனிடையே மகாத்மா காந்தியடிகளின் 75-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் இன்று மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மெரினாவில் உள்ள காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்ட படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் இன்று மரியாதை செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு ட்விட்டர் பதிவை பதிவிட்டுள்ளார். அதில், மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்! என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் கருத்து
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த ட்விட்டர் பதிவில் நெட்டிசன்கள் பலரும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். @Arasu89104743 என்பவர், காந்தி இறக்கவில்லை ஆர்எஸ்எஸ் அமைப்பால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவின் முதல் தீவிரவாத அமைப்பு ஆர்எஸ்எஸ் முதல் தீவிரவாதி கோட்சே. வரலாற்றை ஒருபோதும் மறக்கமாட்டோம் என எழுதியுள்ளார். @siddiq003 என்பவர், இந்தியாவின் முதல் தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ், காந்தியை படுகொலை செய்த நாள் இன்று.. என குறிப்பிட்டுள்ளார். @Saravan93579536 என்பவர், தீமையான கொள்கைகளை தாங்கி, செயல்களையாற்றி, தீமையே போதிக்கும், சமூக நல்லிணக்கத்தை, ஒற்றுமையை, சீர்குலைக்கும் கோட்சே கூட்டத்தை ஒழிப்போம் என பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications