அண்ணாமலை இலங்கை பயணம்.. பாஜகவுடனான கூட்டணியில் பிரச்சினையா? ஜெயக்குமார் விளக்கம்
சென்னை: தோல்வி பயத்தால் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சியை திமுக போட்டியிட வைத்துள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இதேபோல் பாஜகவுடனான கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிய ஜெயக்குமார், ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சி இருந்ததால் அண்ணாமலை இலங்கைக்கு சென்றுள்ளார் என்றும் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியால் இரட்டை இலை சின்னம் செல்வாக்கு குறைந்துவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளரக்ளுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஜெயக்குமார் கூறியதாவது:-

நன்றி கெட்ட கருத்தாக
டிடிவி தினகரன் இரட்டை இலைக்கு செல்வாக்கு போயிவிட்டதாக விமர்சித்தது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், டிடிவி தினகரனின் கருத்து நன்றி கெட்ட கருத்தாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ்சை எம்.ஜி.ஆரின் ஆன்மா மன்னிக்காது. இரட்டை இலை பட்டி தொட்டியெல்லாம் தெரிந்த ஒரு பிரபலமான சின்னம். அந்த சின்னத்திற்கு மவுசு குறைந்து விட்டது, இனி வாய்ப்பு இல்லை என்று சொல்வது உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் நிலையாகத்தான் எடுக்க முடியும்.

இப்படியா பொய் சொல்வது
40 ஆயிரம் ஒட்டுக்களை போலியாக சேர்த்து இருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து இருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு எந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இந்த ஆட்சிக்கு பாடம் புகட்டும் வகையில் இரட்டை இலைக்கு ஓட்டு போட இருப்பதாக மக்கள் பேசி வருகின்றனர். 85 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக சொல்கிறார்கள். இப்படியா பொய் சொல்வது. பெண்களுக்கான மாத உரிமைத்தொகை இன்னும் கொடுக்கவில்லை.

காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை
கல்விக்கடன் ரத்து செய்வதாக சொன்னார்கள். அதை இன்னும் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஒரு துக்ளக் அரசாங்கம் தமிழ்நாட்டை இன்று ஆண்டு கொண்டு இருக்கிறது. காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தர்ம அடி வாங்கும் காவல்துறையாகத்தான் இன்று இருக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் சாதாரண பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்க முடியும்.

எப்படியும் திமுக தோற்கத்தான் போகிறது
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை தவிர்த்து 30 அமைச்சர்கள் ஈரோட்டில் தான் முகாமிட்டுள்ளனர். பண பலம் அதிகார பலம் மூலம் தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெற திமுக திட்டமிட்டுள்ளது. எப்படியும் திமுக தோற்கத்தான் போகிறது. தோல்வி பயத்தால் தான் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் கட்சியை திமுக போட்டியிட வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications