சொத்து இல்லை.. அடமானம் இல்லை.. ஆனாலும் ரூ.2.7 லட்ச கடன்.. இந்திய இளைஞர்கள் சிக்கிய மாய வலை?
சென்னை: இன்றைய இளைஞர்கள் கையில் காசு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கடன் வாங்கியாவது ஆசைப்பட்டதை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.. இது உலகம் முழுக்க இருக்கும் ஒரு டிரெண்ட் என்றாலும், இந்தியாவில் இது இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.. ஆம், நாட்டின் முன்னணி ஆய்வு நிறுவனமான சி.ஆர்.ஐ.எப். ஹைமார்க் கொடுத்துள்ள புதிய ரிப்போர்ட், இந்திய இளைஞர்கள் எந்தளவுக்கு கடன் வலையில் சிக்கியிருக்கிறார்கள் என்பதைப் புட்டுப் புட்டு வைத்துள்ளது..
.ஆர்.ஐ.எப். ஹைமார்க் தந்துள்ள புதிய ரிப்போர்ட்டின்படி, இந்தியாவில் கடன் வாங்குபவர்களில் 23 சதவீதம் பேர் 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் தான்.. கடந்த 2021-ல் 4 கோடியாக இருந்த இவர்களின் எண்ணிக்கை, இப்போது 6.6 கோடியாக எகிறியுள்ளது..

புதிய கடன்கள்
அதாவது, 4 வருடத்தில் 65 சதவீதம் பேர் கூடுதலாகக் கடன் வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள்.. குறிப்பாக 2025-ல் கொடுக்கப்பட்ட புதிய கடன்களில் பாதியளவு இளைஞர்களுக்குத் தான் போயிருக்கிறது..
இளைஞர்கள் வாங்கும் கடன்களில் ஒரு பெரிய ஆபத்து ஒளிந்திருக்கிறது.. அவர்கள் வீடு கட்டுவதற்கோ அல்லது எதிர்காலச் சொத்துக்கோ கடன் வாங்குவதில்லை.. மாறாக, செல்போன், லேப்டாப் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்கவே அதிகம் கடன் வாங்குகிறார்கள்.. இதில் 29.3 சதவீதம் பேர் தனிநபர் கடனையும், 15.5 சதவீதம் பேர் கிரெடிட் கார்டு கடனையும் நம்பியிருக்கிறார்கள்.
அடமானம், சொத்து இல்லாமல் கடன்
அடமானம் எதுவும் இல்லாமல் வழங்கப்படும் இத்தகைய கடன்களுக்கு வட்டி மிக மிக அதிகம்.. இந்த வட்டிப் பொறி தெரியாமலேயே இளைஞர்கள் இதில் விழுகிறார்கள்..
ஒரு இளைஞரின் சராசரி கடன் தொகை 2.7 லட்சமாக இருக்கிறது.. ஒரு கடனை அடைக்கத் தெரியாமல், அதைத் தீர்ப்பதற்காக இன்னொரு கடன் எனத் தொடர்ச்சியாகக் கடன் வாங்கும் பழக்கம் இவர்களிடம் அதிகரித்துள்ளது.. இப்படித் தொடர்ந்து கடன் வாங்குவதால், அவர்களின் கிரெடிட் ஸ்கோர் அடியோடு பாதிக்கப்படும்.. இதனால் பின்னாளில் ஒரு அவசர தேவைக்கோ அல்லது தொழில் தொடங்கவோ வங்கியில் கடன் கேட்டால் கிடைக்கவே கிடைக்காது.
இந்திய இளைஞர்களுக்கு மன உளைச்சல்
அதுமட்டுமில்லாமல், வாங்கிய கடனை 31 முதல் 90 நாட்கள் வரை கட்டாமல் இழுத்தடிக்கும் பழக்கமும் இளைஞர்களிடம் அதிகமாகி வருகிறது..
தவணை கட்ட முடியாமல் போகும்போது ஏற்படும் மன உளைச்சல், இளைஞர்களின் நிம்மதியைக் கெடுக்கிறது.. சம்பாதிக்கும் முன்பே கடனாளியாக மாறுவது அவர்களின் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குகிறது.. ஆசைக்காகக் கடன் வாங்கிவிட்டு, வாழ்நாள் முழுவதும் வட்டி கட்டும் இந்த நிலை மாற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கவலையாக இருக்கிறது.
முறையான திட்டமிடல் இல்லாவிட்டால், இந்த இளம் தலைமுறை மீள முடியாத நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது..!!












Click it and Unblock the Notifications