சொத்து வரி மீண்டும் உயர்கிறதா? அதிர்ந்து போன பொதுமக்கள்.. உடனடியாக ‘குட் நியூஸ்’ சொன்ன தமிழக அரசு!
சென்னை: தமிழகத்தில் சொத்து வரி 6% உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சொத்து வரியை உயர்த்தியதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் மாநகராட்சி, நகராட்சிகளில் சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்து வந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு சொத்து வரி சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த அக்டோபர் மாதம் சொத்து வரி உயர்வு அமலுக்கு வந்தது. சொத்து வரி உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் 6 சதவிகிதம் சொத்துவரி உயர்த்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியானது.
அதாவது 2025-26 ஆம் நிதியாண்டில் வெளிப்படையான அறிவிப்பு இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை 6 % உயர்த்தியுள்ளன என்று ஒரு செய்தி வெளியானது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், "மத்திய அரசின் 15-வது நிதிக்குழுவின் நிபந்தனைகளின்படி, ஒவ்வொரு நகர்ப்புற அமைப்பும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சியின் சதவிகிதத்தை ஒப்பிடுகையில் சராசரியாக 11.5 சதவிகிதம் சொத்துவரி வருவாயை உயர்த்தினால் மட்டுமே. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனையைக் கருத்தில் கொண்டு 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சொத்துவரி அரசாணை எண். 113. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (எம்ஏ4) துறை, நாள் 5.9.2024-ன்படி 6 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினால் சொத்துவரி எதுவும் உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில், இன்று வெளியான ஒரு நாளிதழில் "எவ்வித அறிவிப்புமின்றி உள்ளாட்சி அமைப்புகள், 6 சதவிகிதம் சொத்து வரியை மீண்டும் உயர்த்தி அமலுக்கு வந்துள்ளதாக" வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications