விஜய் வேலூர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.. தவெக நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றம்!
சென்னை: பிப்ரவரி 23 ஆம் தேதி வேலூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், பங்கேற்க 4,900 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி; QR CODE கொண்ட அனுமதிச் சீட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே நிர்வாகிகள் கூட்டத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகப் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தீவிர தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் சேலத்தில் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த அகரம்சேரி பகுதியில் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சுமார் 33 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஒருவர் பலியான சம்பவத்தை கருத்தில் கொண்டு, வேலூர் கூட்டத்திற்கு மாவட்ட காவல்துறை கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இதனால், மக்கள் சந்திப்பாக நடைபெற இருந்த கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தவெக தரப்பில், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் வருகிற 23 ஆம் தேதி அன்று நடைபெறவிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது. தற்போது நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்க 4,900 நிர்வாகிகளுக்கு க்யூ ஆர் கோடு வசதியுடன் கூடிய நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த சீட்டுகள் ஸ்கேன் செய்யப்பட்ட பின்னரே நிர்வாகிகள் அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
இது முற்றிலும் கட்சி நிர்வாகிகளுக்கான சந்திப்பு என்பதால், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், உடல்நலக்குறைவு உள்ளவர்கள் மற்றும் நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் நேரில் வருவதை தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கட்சியின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை கருதி அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications