தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் கிடையாது.. எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு.. பத்திரிகையாளர் மணி!
சென்னை: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவையில் உள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ், திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவின் என்.சந்திரசேகரன், மதிமுகவின் வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், மாநிலங்களவை தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
ஜூன் 9ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும், வேட்புமனுவைத் திரும்பப் பெற ஜூன் 12ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் 2 நாட்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டது. அதில் பி.வில்சனுக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர்கள்
இதன்பின் கவிஞர் சல்மா மற்றும் சேலத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.சிவலிங்கத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதேபோல் ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உறுதி அளித்தபடி, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக தரப்பில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
பத்திரிகையாளர் மணி கருத்து
இதுதொடர்பாக பத்திரிகையாளர் மணி ஒன் இந்தியா அரசியலுக்கு அளித்துள்ள பேட்டியில், மாநிலங்களவை தேர்தலில் 2 சீட்களிலும் அதிமுகவே நிற்கும். நிச்சயமாக கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்க மாட்டார்கள். பாஜகவை தவிர வேறு எந்த கட்சியும் கூட்டணியில் இல்லை. அதனால மாநிலங்களவை தேர்தலில் பாமக மற்றும் தேமுதிகவுக்கு சீட் கொடுக்க மாட்டார்கள்.
முதுகில் குத்திய அன்புமணி
குறிப்பாக பாமகவுக்கு எதற்காக அதிமுக கொடுக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் கடைசி வரை எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, இறுதியாக பாஜகவுடன் சென்றார். ஜிகே வாசனுக்கும் கொடுத்தார்கள். அவரும் பாஜகவுடன் சென்று அதிமுகவை எதிர்த்தார். தேமுதிகவை பொறுத்தவரை எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்று அதிமுக கூறுகிறது.
டெல்லியில் அதிமுக பலம்
நிச்சயமாக அதிமுக மாநிலங்களவை சீட்டை தேமுதிகவுக்கு கொடுக்காது. ஏனென்றால் லோக் சபாவில் அதிமுகவுக்கு ஒருவர் கூட இல்லை. மாநிலங்களவையில் 4 பேர் இருக்கிறார்கள். அதில் 2 குறைந்தால், நிச்சயம் அதிமுகவுக்கு பின்னடைவு. டெல்லியில் ஒவ்வொரு எம்பியும் முக்கியம். அதனால் 2 சீட்டையும் யாருக்கும் கொடுக்க மாட்டார்கள்.
பாமகவுக்கு வாய்ப்பில்லை
பாமகவை கூட்டணி கொண்டு வருவதற்காக அன்புமணிக்கு கொடுப்பார்களா என்று கேட்கப்படுகிறது. ஆனால் திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்கும் சூழல் இல்லை. முதல்வர் ஸ்டாலின் விசிகவுடன் பயணிப்பதை விரும்புகிறார். அதனால் பாமகவுக்கு அதிமுக கூட்டணி மட்டுமே ஒரே வாய்ப்பு. திமுகவின் கூட்டணி கதவுகள் மூடப்பட்டுவிட்டது. அதனால் தேமுதிக மற்றும் பாமக கட்சிகளுக்கு வேறு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications