Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக பக்கம் சாயும் தவாக வேல்முருகன்? ஆனா எடப்பாடி என்ன இப்படி சொல்றாரு? 2026ல் வேற கணக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கூட்டணியில் இணைவது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தொழிற்சாலைகளுக்கான மின்கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி 100% உயர்வு, கடைகளுக்கு 150% உயர்வு, குடிநீர் வரி, பத்திரப்பதிவு கைட்லைன் மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி எல்லா வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்காண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு பெரும் பிரச்னைகளை மறைக்க, தொகுதி மறுசீரமைப்பு என்ற நாடகத்தை முதலமைச்சர் அரங்கேற்றி உள்ளார்.

Edapapdi palaniswami aiadmk velmurugan

எடப்பாடி பேட்டி

இதை நாடாளுமன்றத்தில் தான் கேட்க வேண்டும். திமுக நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தியது. ஆனால், இப்போது சென்னையில் பல மாநில முதல்வர்களை அழைத்து நடத்திய நிகழ்ச்சி நடத்தி உள்ளது. லஞ்சம், ஊழல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை மறைப்பதற்காகவே நேற்றைய தினம் திமுக இந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளது.

டாஸ்மாக்கில் 1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் திமுக அரசில் ஊழல் நடைபெறும் என்பது நிரூபணமாகியுள்ளது. டாஸ்மாக் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.

பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் மது அருந்தும் சூழல் உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை நடக்கிறது. திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் தொழுகையை முடித்து வீட்டுக்கு செல்லும் வழியில் வெட்டப்பட்டார். அவர் முன்பே புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கொலைக்கு முன்பு வீடியோ வெளியிட்டு உதவி கோரினார். ஆனால், துப்பில்லாத இந்த அரசு தடுக்கவில்லை. இந்த ஆட்சியில் இன்று உயிரோடு இருப்பவர் நாளை இருப்பாரா என தெரியாத நிலை உள்ளது" எனத் தெரிவித்தார்.

வேல்முருகனுடன் பேச்சுவார்த்தையா?

மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணியில் சேரப்போவதாக செய்திகள் வருகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "இதுதொடர்பாக அவரும் எங்களை அணுகவில்லை. நாங்களும் அவரிடம் கேட்கவில்லை" என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த 20 ஆம் தேதி கேள்வி நேரத்தின் போது, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ சீருடைப் பணியாளர் தேர்வாணையம் குறித்தும் பேசினார். அவரது கருத்துக்கு அதிமுக எம்.எல்.ஏ ஆர்பி உதயகுமார் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்ததால் வேல்முருகனின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

தவாக தலைவர் வேல்முருகன்

இதனால் ஆவேசமான வேல்முருகன் சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்று முழக்கமிட்டார். இதனால் அதிருப்தியடைந்த சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவை விதிகளை மீறி செயல்படுகிறார். சபாநாயகருக்கு மிரட்டல் விடுக்கிறார். திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். அவருக்கு தவாக உறுப்பினராகவே இன்று வரை மதிப்பளிக்கப்படுகிறது. வேல்முருகன் இப்படி நடந்துகொண்டது அதிகப்பிரசங்கித்தனம் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, எழுந்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின், "சட்டப்பேரவையில் தவாக தலைவர் வேல்முருகன் அதிகப்பிரசிங்கித்தனமாக நடந்து கொள்வது வேதனை அளிக்கிறது. இடத்தை விட்டு எழுந்து வந்து கூச்சல் போடுவது முறையல்ல. வேல்முருகனின் மீது, சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன் தன்னை திருத்திக்கொள்ளும் வகையில், இந்நடவடிக்கை அமைய வேண்டும்" என கோரிக்கை வைத்தார். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து வேல்முருகன் கோபமாக வெளியேறினார். இதன் காரணமாக, வேல்முருகன் திமுக கூட்டணியில் தொடர்வாரா என்ற விவாதம் எழுந்தது. 2026 சட்டசபை தேர்தலில் அவர் அணி மாறக்கூடும் என்ற யூகங்கள் எழுந்தன. அவர் அதிமுக கூட்டணியில் இணையக்கூடும் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி அந்த தகவலை மறுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+