தினகரனுக்கு இப்படியொரு சோதனையா.. குக்கரும் இல்லை.. இரட்டை இலையும் இல்லை.. அடி மேல் அடி!
சென்னை: தினகரனுக்கு ஏற்கெனவே குக்கர் சின்னம் தகராறில் உள்ளது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னமும் அவருக்கு இல்லை என்ற சோதனையான தீர்ப்பு வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைந்த பிறகு ஆர் கே நகருக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது இரட்டை இலை சின்னத்துக்கு இரு தரப்பினர் சொந்தம் கொண்டாடியதால் அந்த சின்னம் முடக்கப்பட்டது.
இந்த நிலையில் சசிகலா, தினகரனை ஓரங்கட்டிவிட்டு இரு அணிகளும் ஒன்றாக இணைந்ததை அடுத்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு அளித்தது. இரட்டை இலையை கொண்டு ஆர் கே நகர் இடைத்தேர்தலை அதிமுக சந்தித்தது. எனினும் தினகரன் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தினகரன்
இதையடுத்து அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை அதிமுகவுக்கு அளித்ததை எதிர்த்து சசிகலாவும் தினகரனும் தனித்தனியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். இதனிடையே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற ஒரு அமைப்பை தினகரன் தொடங்கினார்.

சின்னத்தை ஒதுக்க முடியாது
இந்த நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது தங்களுக்கு குக்கர் சின்னத்தை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் தேர்தல் ஆணையமோ பொது பட்டியலில் உள்ள சின்னத்தை ஒரு கட்சிக்கு ஒதுக்க முடியாது என கூறிவிட்டது.

தேர்தல் ஆணையம்
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு தினகரன் சென்றார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கை விரைந்து முடிக்குமாறும் குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்து கொள்ளலாம் என தீர்ப்பளித்தது.

நீதிபதிகள்
ஏற்கெனவே தேர்தல் ஆணையம் தெளிவாக கூறிவிட்டதால் தினகரனுக்கு குக்கர் சின்னம் இல்லை என்றாகிவிட்டது. இந்த நிலையில் இன்று இரட்டை இலை சின்னம் தொடர்பான தீர்ப்பு வெளியானது. அப்போது இரட்டை இலை சின்னம் தினகரனுக்கு வழங்க முடியாது. அது போல் தினகரனுக்கு குக்கர் சின்னத்தையாவது வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவர் தரப்பு கேட்டுக் கொண்டதற்கு டெல்லி ஹைகோர்ட் நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

சோதனை
இரட்டை இலை தான் இல்லை. சரி குக்கராவது தினகரனுக்கு கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்த அவருக்கு இப்படி சோதனை மேல் சோதனை வந்திருப்பது கட்சி தொண்டர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி பொது பட்டியலில் இல்லாத ஒரு சின்னத்தை தினகரன் தேர்வு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பழைய படி அவர் சுயேச்சையாக ஒரு சின்னத்தில் போட்டியிட வேண்டிய சூழல் நிலவும் என தெரிகிறது. எந்த சின்னம் கொடுத்தாலும் தினகரன் கில்லி மாதிரி சொல்லி அடிப்பார் என தொண்டர்கள் உற்சாகம் பொங்க தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications