வடகிழக்கு பருவமழை..சனிக்கிழமை முதல் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..நவ.4 வரை குடை அவசியம்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். நவம்பர் 4ம் தேதி வரை தமிழ்நாட்டில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. கயத்தாறு, ராஜபாளையம், விருதுநகர் உள்ளிட்ட பல ஊர்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29 ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும்.
இன்று தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக
இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
மே மாதத்தில் வெப்பநிலை குறையும்... தமிழகத்தில் வெப்ப அலை வீசாது... பாலச்சந்திரன் கணிப்பு
கனமழை
29ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
இடி மின்னலுடன் மழை
30ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
எங்கெங்கு மழை
31ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையில் மழை
சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். . நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
பாலச்சந்திரன்
இதனிடையே சென்னையில் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , தமிழ்நாட்டில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று கூறினார். தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து கடந்த 23ஆம் தேதி விலகியது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டு இயல்பை விட 45% அதிகமாக பெய்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை
வரும் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது. வரும் நாட்களில் மழை பொழிவு படிப்படியாக அதிகரிக்கும். சிட்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.