வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்- வதந்தி பரப்புதல், வன்முறை தூண்டுதல்- அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு!
வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு.
சென்னை: வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளில் போலீசார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வன்முறையை தூண்டும் வகையில் அறிக்கை வெளியிட்டதாகவும் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக வதந்திகளை சமூக வலைதளங்களில் பாஜகவினர் கிளப்பிவிட்டனர். இது பீகார் சட்டசபையிலும் எதிரொலித்தது. இதனைத் தொடர்ந்து பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசுகளின் குழுக்கள் தமிழ்நாட்டில் ஆய்வு நடத்தியது. ஆனா தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் முழுமையான சுதந்திரம், பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; 7 ஆண்டு சிறை தண்டனைக்காக வழக்குகள் பாயும் என தமிழ்நாடு போலீசார் எச்சரித்திருந்தனர். இது தொடர்பாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் மாநிலத்திலிருந்து வந்து இங்கு தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய, பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய, தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கக்கூடிய சிலரை எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக அரசியல் லாபம் தேட நினைக்கக்கூடியவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லுகிறேன். இன்று காலையில்கூட பீகார் மாநிலத்தினுடைய முதலமைச்சர் நிதீஷ்குமார் நான் தொலைபேசியில் பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் எவ்வளவு பிளவை ஏற்படுத்த நினைத்தாலும் ஒருக்காலும் இந்தக் கூட்டணியை நீங்கள் பிளவுபடுத்திட முடியாது என்பதை மாத்திரம் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லி, யார் சட்டம்-ஒழுங்கை கெடுக்கின்ற சூழ்நிலையில் ஈடுபட்டாலும் அவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும் அவனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்! அடக்குவோம் என எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் வட இந்திய தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்புதல், வன்முறையை தூண்டுதல் ஆகியவற்றுக்காக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது அதிரடியாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமது அறிக்கை மூலம் இரு பிரிவினரிடையே மோதல் உருவாக்க முயன்றதாகவும் அண்ணாமலை மீது வழக்கு பாய்ந்துள்ளது. அண்ணாமலை மீது மொத்தம் வதந்தி பரப்புதல், வன்முறையை தூண்டுதல், மதரீதியான மோதலை தூண்டுதல் உள்ளிட்டவைகளுக்காக மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது தமிழ்நாடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே வட இந்திய பத்திரிகைகள், உபி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications