வேலைக்கு சேர்ந்த இரண்டே வாரத்தில் கைவரிசை காட்டிய வட மாநில இளைஞர்கள்.. தடதடத்த சவுகார்பேட்டை
சென்னை: வேலைக்கு சேர்ந்த இரண்டே வாரங்களில் கடையில் பணம், வெள்ளி நகைகளை திருடிச் சென்ற கடை ஊழியர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை சவுகார்பேட்டை பத்ரி வீராசாமி தெருவைச் சேர்ந்தவர் ஜெலாம்சிங் (42). இவர் பூக்கடை கிருஷ்ண ஐயர் தெருவில் பிளாஸ்டிக் மொத்த விற்பனை மற்றும் ஸ்டேஷனரி பொருட்களின் விற்பனையகத்தையும் நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு இரு வாரங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜாராம் (23) என்பவர் வேலை கேட்டு வந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஜெலாம்சிங்கும் அந்த நபரை வேலைக்குச் சேர்த்து கொண்டார்.

குடும்ப உறுப்பினர்
ஜெலாம்சிங் ராஜாராமை தனது வீட்டின் குடும்ப உறுப்பினர் போல் பார்த்தார். இதனால் கல்லா சாவி, கடை சாவியையும் ராஜாராமிடம் ஜெலாம்சிங் கொடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில் கடையில் தங்கியிருந்த ராஜாராம், நேற்று முன் தினம் இரவு தனது சகோதரரான பிரகாராம் (32) என்பவரை வரவழைத்துள்ளார்.

கடை கல்லா பெட்டி
அப்போது கடை கல்லா பெட்டியில் இருந்த 7.85 லட்சம் ரூபாய் ரொக்கம் , 19 வெள்ளி காயின், வெள்ளி விநாயகர் சிலை, சில்வர் பூட்டு, இரு செல்போன் ஆகியவற்றை கடையிலிருந்து திருடிக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். அப்போது பூக்கடை ரோந்து பணியிலிருந்த போலீஸார், வால்டாக்ஸ் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர்.

சந்தேகம்
அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்கள் வைத்திருந்த பையை திறந்து பார்த்த போது அதில் பணம், வெள்ளி பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இருவரையும் பூக்கடை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இருவர் கைது
அப்போது தான் ஜெலாம்சிங் கடையில் வேலை பார்த்தும் அங்கிருந்து கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவர் மீது பூக்கடை குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வேலைக்கு சேர்ந்த இரண்டே வாரத்தில் வேலை கொடுத்தவரிடமே கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications