“நாங்க பாஜக அடிமைகள் அல்ல.. ராஜதந்திரிகள்”.. சீறிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி!
சென்னை: "திமுகவினர் எங்களை பார்த்து பாஜகவின் அடிமை என்று சொல்கிறார்கள். நாங்கள் அடிமை அல்ல, ராஜதந்திரிகள்" என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான கே.பி முனுசாமி, அண்மையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் பேச்சுக்கு பதில் கொடுத்துள்ளார்.

கேபி முனுசாமி பேசுகையில், "அத்திக்கடவு அவினாசி திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவாலும் கொண்டு வர முடியவில்லை எம்ஜிஆராலும் கொண்டுவர முடியவில்லை அதை கொண்டு வந்தது எடப்பாடியார் தான்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், திமுகவினரும் எங்களை பாஜகவின் அடிமை என்று சொல்கிறார்கள். நாங்கள் அடிமை அல்ல ராஜதந்திரிகள். ஆட்சி அதிகாரம் ஸ்டாலின் கையில் இல்லை, பல பேரின் கையில் உள்ளது." எனப் பேசி உள்ளார்.
மேலும், "இன்று கல்வி நிதி ரூபாய் 2500 கோடி மத்திய அரசு கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். 100 நாள் வேலை திட்ட நிதி ரூபாய் 3796 கோடி மத்திய அரசு தரவில்லை என்று பட்ஜெட்டில் இருக்கிறது. மாநில முதல்வர், மத்திய அரசிடம் ஏன் நிதியை வாங்க முடியவில்லை?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "நம்முடைய உரிமைகளைப் பறிப்பதையும், தமிழ்நாடு கொச்சைப்படுத்தப்படுவதையும் நம்மால் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?
ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம் என்று, பதவி சுகத்துக்காக மத்திய அரசிடம் பணிந்து செல்லும் முதுகெலும்பு இல்லாத அடிமைக் கூட்டம் அல்ல இது! சுயமரியாதையும், இனமான உணர்வும் உள்ள திராவிட முன்னேற்றக் கழகம்! மத்திய அரசின் எதேச்சதிகாரத்திற்கு எதிராக போராடுகிற தி.மு.க.வின் போராட்டக் குணத்தைப் பார்க்க வேண்டிய நிலைமையை உருவாக்கி இருக்கிறார்கள்" எனப் பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications