போட்டோ எடுத்தது குற்றமா? தினகரனுடன் 'முதல்வர்' கூடதான் போட்டோ எடுத்தாரு? எம்எல்ஏ பிரபு கேள்வி
சென்னை: டிடிவி தினகரனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது கட்சி விரோத நடவடிக்கை என்றால் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் சசிகலாவுடனும், தினகரனோடும் புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள் தானே? என கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிமுக கொறடா ராஜேந்திரன் தன்னுடைய உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி, அறந்தாங்கி ரத்னசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம கலைச்செல்வன் ஆகிய மூன்று அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யுமாறு, சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்தார். அதற்காக புகைப்பட ஆதாரமாக டிடிவி தினகரனுடன் 3 எம்எல்ஏக்களும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை காட்டியிருந்தார்.
இதைஏற்று சபாநாயகர் தனபால், அறந்தாங்கி ரத்னசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாச்சலம கலைச்செல்வன் ஆகிய மூன்று பேருக்கும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இந்த விளக்கம் திருப்தி அளித்தால் அவர்கள் பதவி தப்பும். இல்லாவிட்டால் 3பேரின் எம்எல்ஏ பதவி பறிபோகும் நிலை உள்ளது.
இந்நிலையில் டிடிவி தினகரனுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது கட்சி விரோத நடவடிக்கை என்றால் முதல்வர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் சசிகலாவுடனும்,எதினகரனோடும் புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள் தானே? என நோட்டீஸ் அனுப்பப்பட்ட கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு கேள்வி எழுப்பி உள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரபு அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வாக்களித்தேன், என் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். இதனிடையே அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தினசபாபதி, சபாநாயகரின் நோட்டீஸ் கிடைத்தவுடன் முறையாக விளக்கம் கொடுப்போம் என்றார். மேலும் தினகரனுடன் இருக்கும் புகைப்படத்தில் எல்லோரும் இருக்கிறார்கள், அவர்கள் மீது நடவடிக்கை என்ன என்றும் ரத்னசபாபதி கேள்வி எழுப்பினார்.