துருவித் துருவி பார்த்தேன் ஒன்றுமே இல்லை.. உறுதிப்பாடு இல்லாத குழப்பமான ஆளுநர் உரை.. ஓபிஎஸ் சாடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று சட்டசபையில் ஆளுநரின் உரையில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட முக்கியமான திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் ஆளுநர் உரை உறுதிப்பாடு இல்லாத குழப்பமான உரையாக உள்ளதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் 16ஆவது தமிழ்நாடு சட்டசபை முதல் கூட்டத்தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையில் உள்ள அம்சங்களை சில கட்சிகள் வரவேற்று வருகிறது.

அதேநேரம் எதிர்க்கட்சிகள் ஆளுநர் உரை குறித்த தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்தி வருகின்றனர். நீட், கல்விக் கடன் ரத்து உள்ளிட்டவை குறித்து இதில் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.

துருவித் துருவிப் பார்த்தேன்

துருவித் துருவிப் பார்த்தேன்

இந்நிலையில், இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பதினாறாவது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தனது கொள்கைகளை, தனது திட்டங்களைத் தேர்தல் அறிக்கை வாயிலாகவும், பிரச்சாரங்கள் வாயிலாகவும் தி.மு.க. அறிவித்தது. அவற்றையெல்லாம் உள்ளடக்கி இந்த ஆளுநர் உரை அமைந்திருக்கிறதா என நான் துருவித் துருவிப் பார்த்தேன். எனக்கு எதுவும் தென்படவில்லை. அனைத்துத் தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 4ரூபாயும் குறைக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை

ஆனால், இது குறித்து எந்த தகவலும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஆளுநர் உரையாற்றுவதற்கு முன்பே, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாது என்று நிதி அமைச்சர் தெளிவுபடுத்திவிட்டார். உண்மை நிலை என்னவென்றால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்க்கு மேலும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய்க்கு மேலும் உயர்ந்தது என்பதுதான் நிதர்சனம்.

நீட் தேர்வு

நீட் தேர்வு

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த நிமிடம் வரை நீட் தேர்வு நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் தெளிவுபடுத்திவிட்டார்கள். ஆளுநர் உரையிலோ, "தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான சட்டங்களை நிறைவேற்றி அத்தகைய சட்டங்களுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்" என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதன்மூலம் ஒரு தெளிவற்ற நிலை காணப்படுவதாகத் தெரிகிறது.

எதுவும் இல்லை

எதுவும் இல்லை

ஏழையெளிய, பாமர மக்களுக்குப் பயனளிக்கும் வாக்குறுதிகளான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்குகின்ற திட்டம், நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாகத் தரப்படும் என்கிற திட்டம், உளுத்தம் பருப்பை மீண்டும் வழங்கும் திட்டம் போன்றவை ஆளுநர் உரையில் இடம்பெறாதது மக்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதேபோல, 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்கிற திட்டம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி திட்டம் போன்றவை ஆளுநர் உரையில் இடம் பெறாதது வேதனை அளிக்கக்கூடிய ஒன்று. ஏனென்றால், இவையெல்லாம் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்ற திட்டங்கள், மக்களுக்குப் பயனளிக்கும் திட்டங்கள்.

மின் கட்டணம்

மின் கட்டணம்

மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம் பெறாதது வருத்தத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தற்போது அடிக்கடி ஏற்படுகின்ற மின்வெட்டு தமிழ்நாட்டு மக்களை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. 2020 ஆம் ஆண்டு கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதே சமயத்தில், 2021 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கொரோனா கொடுந்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஆளுநர் உரையில் ஏதாவது அறிவிப்பு வரும் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்,

சந்தேகம்

சந்தேகம்

மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு தற்போது உள்ள வருமான வரம்பான 8 இலட்சம் ரூபாய் என்பதை 25 இலட்சம் ரூபாயாக உயர்த்த அரசை வலியுறுத்துவோம் என்றும் ஆளுநர் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ஆளுநர் உரையிலுள்ள வார்த்தைகளைப் பார்க்கும்போது, இந்தத் திட்டங்கள் எல்லாம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதம், உறுதிப்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. இவை எல்லாம் ஏதோ சம்பிரதாயத்திற்காக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றதோ என்ற எண்ணம்தான் மக்களிடையே மேலோங்கி நிற்கிறது.

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம்

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம்

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் கீழ் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் மனுக்களில் இதுவரை 63,500 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை மொத்தம் எத்தனை மனுக்கள் பெறப்பட்டன, அதில் எத்தனை, மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டன என்று விவரம் தெரிவிக்கப்படவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பழைய ஓய்வூதியம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதுகுறித்து ஆளுநர் உரையில் எதுவும் அறிவிக்கப்படாதது அவர்கள் மனங்களில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழப்பமான உரை

குழப்பமான உரை

திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட முக்கியமான திட்டங்கள், கொள்கைகள் இந்த ஆளுநர் உரையில் இடம் பெறாததைப் பார்க்கும்போது, வாக்குறுதிகள் எல்லாம் ஆட்சிக் கட்டிலில் அமருவதற்காக அள்ளி வீசப்பட்டவையோ என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. மொத்தத்தில், இது ஆளுநர் உரை அல்ல, உறுதிப்பாடு இல்லாத குழப்பமான உரை" என்று அவர் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+