முஸ்லிம்கள் சூர்ய நமஸ்காரம் செய்யலாம்.. என்ன தீங்கு வரப்போகிறது.. ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் கேள்வி
டெல்லி: இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக ஆறுகளையும் சூரியனையும் வழிபட வேண்டும். நமது முஸ்லிம் சகோதரர்கள் 'சூர்ய நமஸ்காரம்' செய்வதால் அவர்களுக்கு என்ன தீங்கு நேர்ந்துவிடப் போகிறது? ஒன்றும் ஆகிவிடாது. இதனால் அவர்கள் மசூதிக்குச் செல்வது தடுத்து நிறுத்தப்படும் என்று அர்த்தமல்ல. நமது இந்து மதம் மேலானது, அது அனைவருக்காகவும் பேசுகிறது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே பேசினார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே, டிசம்பர் 17, 2025 அன்று உத்தரப் பிரதேச மாநிலம் சாந்த் கபீர் நகரில் நடைபெற்ற 'இந்து மாநாட்டில்' உரையாற்றினார். அந்த உரையில் அவர் முஸ்லிம்கள் மற்றும் சூர்ய நமஸ்காரம் குறித்துப் பேசினார்.

என்ன பாதிப்பு வரும்
அப்போது அவர் கூறுகையில், "இந்து மதம் 'மேலானது'. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக ஆறுகளையும் சூரியனையும் வழிபட வேண்டும். அவர்களுக்கு இதனால் எந்தத் தீங்கும் ஏற்படப் போவது கிடையாது. நமது முஸ்லிம் சகோதரர்களும் 'சூர்ய நமஸ்காரம்' செய்தால் அவர்களுக்கு என்ன பாதிப்பு வந்துவிடும்? இதனால் அவர்கள் மசூதிக்குச் செல்வது தடுத்து நிறுத்தப்படும் என்று அர்த்தம் கிடையாது. நமது இந்து மதம் மேலானது. அது அனைவருக்காகவும் பேசுகிறது.
இந்து தத்துவம்
மக்கள் எந்த மதத்தையும் பின்பற்ற சுதந்திரம் உண்டு, ஆனால் அவர்கள் மனித நேயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியப் பிரிவினையின் போது இந்துக்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இந்து தத்துவம் அனைத்து உயிரினங்களிடத்தும் இயற்கையிடத்தும் அகிம்சையை போதிக்கிறது. குழந்தைகளுக்குத் தெய்வங்களின் பெயரைச் சூட்டுவது என்பத இந்தியாவின் தனித்துவமான மரபாக உள்ளது" என்று கூறினார்
சமூக வலைதளங்களில் விவாதம்
தத்தாத்ரேய ஹோசபலேவின் இந்தப் பேச்சு பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. இந்து மத நடைமுறைகளை சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்துடன் இணைத்துப் பேசுவதன் மூலம், இது ஒரு மதம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல, இது ஒரு 'நாகரிக மரபு' Civilisational என்று அவர் தன் கருத்தை முன்வைக்கிறார்.
சர்ச்சை என்ன
"இந்து மதம் மேலானது" என்ற கருத்தும், "மசூதிக்குச் செல்லத் தடை விதிக்கப்படாது" என்ற கருத்தும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது மற்ற மதங்களை விட ஒரு மதத்தின் உயர்வை நிலைநிறுத்துவதாகவும், முஸ்லிம்கள் இந்துப் பெரும்பான்மை கலாச்சாரக் குறியீடுகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தங்கள் மதத்தைப் பின்பற்றலாம் என்ற தொனியில் இருப்பதாகவும் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அரசியலமைப்பு குறித்தும் கருத்து
இதற்கு முன்னதாக ஜூன் மாதம், அவசரநிலையின் போது அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட 'மதச்சார்பற்ற'மற்றும் 'சமதர்மம்' ஆகிய வார்த்தைகளைத் தொடர்ந்து நீடிப்பது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications