ஹெல்மெட் போடாவிட்டால் .. எல்லா போலீசும் அபராதம் விதிக்கும்.. அதிகாரம் வழங்கியது நீதிமன்றம்
சென்னை: ஹெல்மெட் போடவில்லை என்றால் அபராதம் விதிக்க போக்குவரத்து பிரிவு மட்டுமல்லாது அனைத்து பிரிவு சப் இன்ஸ்பெக்டர்களுக்கும் நீதிமன்றம் அதிகாரம் வழங்கி உத்தரவிடடுள்ளது. இதனால் இனி ஹெல்மெட் போடாமல் போலீசிடம் போய் நின்று கொண்டு, அபாராதம் விதிக்க டிராபிக் போலீசுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கு யாரும் ரூல்ஸ் பேச முடியாது.மீறி பேசினால் நிச்சயம் தக்க சன்மானத்தை போலீஸ் அளித்துவிடும்.
ஹெல்மெட் அணிவது உட்பட போக்குவரத்து விதிகளை பின்பற்றவேண்டும் என்று நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதை கேட்பதற்கு பலரும் தயாராக இல்லை.
இந்நிலையில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியவேண்டும், காரில் செல்வோர் சீட் பெல்ட் அணியவேண்டும் என்பது உட்பட போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என்று கோரி மீண்டும் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சுப்பிரமணியம் பிரசாத் மற்றும் எஸ்.மணிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

சாலைபாதுகாப்புக்கு ரூ.605 கோடி
இந்த அமர்வு முன்னர் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் நீதிபதிகள் முன் வாதிடுகையில் "மோட்டார் வாகன சட்ட விதிமீறல் குறித்து புகார் அளிக்க புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் 96 புகார்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்புக்காக 2000-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ரூ.605.55 கோடி செலவிடப்பட்டுள்ளது.

14 லட்சத்து 6 ஆயிரம் வழக்கு
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 2018-ம் ஆண்டு ‘ஹெல்மெட்' அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர்கள் மீது 14 லட்சத்து 6 ஆயிரத்து 491 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘சீட் பெல்ட்' அணியாததற்காக 39 லட்சத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அபராதம் வசூலிக்க எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரங்களை முறையாக கையாள காவல்துறையினருக்கு போதிய பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த 2 வார அவகாசம் வழங்க வேண்டும்" என்று வாதிட்டார்.

உயர்நீதிமன்றம் அதிரடி
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,மோட்டார் வாகன விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளில் அபராதம் விதிக்கும் அதிகாரம் தற்போது போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்களுக்கு மட்டுமே உள்ள்ளது. இனிமேல் இந்த அதிகாரம், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்துப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அரசாணை அமல்
அதோடு போக்குவரத்து விதிமீறல் தொடர்பான குற்றத்துக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்த 2011ஆம் ஆண்டே போக்குவரத்து ஆணையர் அரசாணை பிறப்பித்துள்ளார். எனவே, ஹெல்மெட் அணியாதவர்கள், மோட்டார் வாகன விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்துவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த வேண்டும்" என்று நீதிபதிகள், தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications