முத்தமிழ் முருகன் மாநாட்டில் முருகனை பற்றி 20 நிமிடங்கள் பேசுவாரா ஸ்டாலின்? சீமான் ஆவேச பேச்சு!
சென்னை: "திடீரென்று முருகன், திமுகவினருக்கு கடவுளாக காட்சியளிக்கிறார். முத்தமிழ் முருகன் மாநாட்டில் குறைந்தது 20 நிமிடங்கள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முருகனை பற்றி பேசுவாரா?" என சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டத்தில் கேள்வி எழுப்பி உள்ளார் சீமான்.
தமிழகத்தில் நிலவி வரும் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைக் கண்டித்தும், மின் கட்டண உயர்வைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசுகையில், "திமுக ஆட்சியில் ஒரு மாதத்தில் 133 கொலைகள் நடந்துள்ளன. 134-வதாக ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்துள்ளது. கொலையாளிகள் எல்லோரும் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். இளைஞர்களை திமுக குற்றச் சமூகமாகவே உருவாக்கிவிட்டது. நிறைந்த போதையில் தான் கொலை செய்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் 595 கொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த கொலைகளுக்கு அரசு பொறுப்பேற்காதாம். தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. குற்றச் செயல்களுக்கு கடும் தண்டனை இல்லாததால் குற்றங்கள் தொடர்கின்றன. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லாமல் இருப்பது கேவலம். எல்லா கொடுஞ்செயல்களுக்கும் குழு அமைக்கிறது இந்த அரசு. கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு 38 குழுக்களை அமைத்துள்ளது.
இதில், நீட் தேர்வு தொடர்பான குழுவின் அறிக்கை என்ன ஆனது? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் குழு அறிக்கை என்ன ஆனது? இதைவிட கொடுங்கோல் ஆட்சியை எங்கும் பார்க்க முடியாது. மத்திய, மாநில அரசுகளைவிட தனியார் நிறுவனங்களிடம் தான் அதிக மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.
மின்சார உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், மின் விநியோகத்திற்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. தமிழகத்துக்கு தொழிலதிபர் அதானி ஏன் வந்தார் என்ற விவரத்தை தெரிவிக்க அரசு ஏன் தயங்குகிறது? காட்டுப்பள்ளி துறைமுகத்தை கட்டிவிடலாம் என அதானி நினைத்தால் அது நடக்காது. அது எங்கள் நாடு, மண், இனம் சார்ந்த பிரச்சனை.
கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்டதற்கு காரணம் காடுகளை அழித்தது தான் என இப்போது பேசுகிறார்கள். யார் மரங்களை வெட்டியது? காடுகளை அழித்தவர்களே இன்று அதைப்பற்றி பேசுகிறார்கள். நான் பலமுறை சொல்லி வருகிறேன். நான் போதிக்கும்போது உங்களுக்குப் புரியாது, பாதிக்கும்போதுதான் புரியும் என்று.
திராவிட மாடல் ஆட்சியை ராமர் ஆட்சி என்று, பெரியார் அசிங்கப்படுத்த முடியாத ராமரை அமைச்சர் ரகுபதி செய்துவிட்டார். திராவிட மாடல் ஆட்சியை ராமர் ஆட்சி என்ற அமைச்சர் ரகுபதியை கண்டித்து ஒரு திமுக தலைவர்களும் பேசவில்லை. வாடகை வாய்களும் பேசவில்லை. பொறைக்குக் கத்தும் நாய்கள் கூட குரைக்கவில்லை.
சீமான் பக்கம் ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் திரும்புவதைத் தடுக்கவே புதுமைப் பெண், தவப்புதல்வன் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. கல்லூரி மாணவ மாணவிகள் சீமானை நோக்கி ஓடிவருவதை பார்த்து அஞ்சுகின்றனர். நாம் தமிழர் கட்சி வாக்குகளில் குறைந்தது 30 லட்சம் வாக்குகள் சீமானுக்கு செல்வதை டேபிளில் இருக்கும் சர்வே சொல்கிறது. அவர்கள் ஓட்டை பெறுவதற்கு மாதம் மாதம் ரூ. 1000 கொடுக்கிறார்கள்.
திடீரென்று முருகன், திமுகவினருக்கு கடவுளாக காட்சியளிக்கிறார். நான் வேல் வேல் வெற்றிவேல் என வேலை தூக்கி திருமுருகப் பெருவிழா நடத்தும்போது முரசொலியில் என்னை திட்டி எழுதிய கட்டுரை இருக்கிறது. இப்போது வாயில் எதை போட்டு ஒட்டி வைத்திருக்கிறீர்கள். முத்தமிழ் முருகன் மாநாட்டில் குறைந்தது 20 நிமிடங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முருகனை பற்றி பேசுவாரா? அருணகிரிநாதர் எழுதியதை பாடவேண்டும்" எனப் பேசி உள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications