"மோடி மீண்டும் பிரதமராவதை என்னால் தடுக்க முடியாது.." டென்ஷன் ஆன நாம் தமிழர் சீமான்! பரபர பேச்சு
சென்னை: பிரதமர் மோடி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு எதிராகப் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் நெல்லை, தென்காசி தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

அதன்படி நெல்லை தொகுதியில் பா. சத்யாவும், தென்காசி தொகுதியில் மயிலை ராஜனும் போட்டியிடுவார்கள். வேட்பாளர் அறிமுகத்திற்குப் பிறகு நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
சீமான்: செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் சீமான், "கடந்த முறையைப் போலவே இந்த முறையும் 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களைக் களமிறக்க உள்ளேன். இந்த முறை என்று இல்லை. எந்த முறையும் யாருடனும் கூட்டணி கிடையாது. எப்போதும் தனித்துத் தான் போட்டியிடுவேன். நான் எனது மக்களை மிகவும் நேசிக்கிறேன். அவர்கள் என்னை நம்பும் போது எனக்கு வாக்களிக்கட்டும். எனக்கு அதைப் பற்றி பிரச்சினை இல்லை. இங்கே யாருடன் கூட்டணி வைக்க முடியும் எனச் சொல்லுங்கள்.
மோடியைத் தடுக்க முடியாது: நரேந்திர மோடி மீண்டும் இந்தியப் பிரதமர் ஆவதை தடுக்கும் வலிமை என்னிடம் இல்லை. ஆனால், காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளையும் சமமாகவே நான் பார்க்கிறேன்.. சம எதிரிகளாகவே நான பார்க்கிறேன். நான் இருக்கும் வரை உங்கள் இருவரையும் உள்ளே நுழைய விட மாட்டேன். நிச்சயம் நின்று சண்டை போடுவேன்.
தேசிய கட்சிகள் யாரையும் உள்ளே விட மாட்டேன். எனக்கும் திராவிட கட்சிகளுக்கும் இருக்கும் மோதல் என்பது உள்ளூர் சண்டை.. ஆனால், தேசிய கட்சிகளை அனுமதிக்க முடியாது. எனக்கு பாஜகவும் தேவையில்லை.. காங்கிரஸும் தேவையில்லை. அவர்களால் இங்கு எதையும் செய்யவே முடியாது.
திமுக: இங்கிருக்கும் திமுக சும்மா பாஜக வந்துவிடும்.. மோடி வந்திடுவார் என்று பூச்சாண்டி காட்டும். அப்படிப் பார்த்தால் செஸ் விளையாட்டு, கேலோ விளையாட்டுப் போட்டிகளுக்கு மோடியை அழைத்தது யார். எதிர்க்கட்சியாக இருக்கும் போது இந்தியா தெரியாது போ என்கிறார்கள் ஆளும் கட்சியான பிறகு இந்தி தெரியும் வா என்பதா உங்கள் நிலைப்பாடு. கேலோ இந்தியா என்றால் என்ன அர்த்தம். விளையாடு இந்தியா என்று தமிழில் வைக்கலாமே.
எதற்காக கேலோ என்ற இந்தி வார்த்தை.. 22 மாநிலங்களில் பாஜக ஆளும் கட்சியாக இருக்கிறது. அதில் எந்த மாநில நலத்திட்டத்திற்கு மோடி நேரடியாகச் சென்றுள்ளார்.. எந்த மாநில அமைச்சரைச் சந்தித்துள்ளார்.. தமிழ்நாட்டின் அமைச்சரை மட்டுமே சந்தித்துள்ளார். தமிழ்நாட்டிற்கு மட்டுமே வந்துள்ளார் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இது இரு தரப்பிற்கும் இருக்கும் ஒருவித புரிதலைக் காட்டுகிறது.
விஜய்க்கு வாழ்த்து: விஜய் அரசியலுக்கு வருவது உறுதி.. அவருக்கு எனது வாழ்த்துகள். அண்ணன் சீமான் ஒரு ஆளாக நின்று சண்டை செய்கிறார்.. அவருடன் கூட நின்று சண்டை செய்யலாம் என்று விஜய் நினைக்கலாம். திமுகவை ஒழிக்காமல்.. இங்கே நல்லாட்சியை வழங்குவது என்பது நடக்கவே நடக்காது. முதலீடுகளை ஈர்க்க முதல்வர் வெளிநாடு செல்கிறார் என்றால் அதை ஏற்கவே முடியாது. அது எனது வளங்களைக் கொள்ளையடிக்கப் போடப்படும் ஒப்பந்தமாகவே நான் பார்ப்பேன்.
நீட் தேர்வைக் கொண்டு வந்தது யார்.. நீட் எதிர்ப்பு என்று 50 லட்சம் கையெழுத்துகளை வாங்கி பொருட்காட்சியில் வைப்பது போல வைத்துள்ளீர்கள். அதை மோடியைப் பார்க்கச் செல்லும் போது கொடுத்து இருக்கலாம். அல்லது மோடி இங்கு வந்த போது கொடுத்து இருக்கலாமே.. மோடியிடம் ஏன் இது குறித்துக் கேட்கவில்லை. சும்மா மாநாட்டில் காட்டினால் எல்லாம் மாறிவிடுமா..
திராவிடம் என்பது ஏமாற்று தான்.. தமிழ் தேசியம் என்பது மாற்று.. எப்படியாவது மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது இவர்கள் கோட்பாடு.. இந்த நிலையில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது எங்கள் கோட்பாடு" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications