புலி வேட்டைக்கு குறுக்கே அணில்கள்.. கொள்கையை கேட்டா தளபதின்னு கத்துறாங்க.. விஜய் மீது பாய்ந்த சீமான்
சென்னை: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினை, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கடுமையாக விமர்சித்து (NTK Seeman Criticizes TVK Vijay) பேசினார். உங்க கொள்கை என்னடா என்று கேட்டால் தளபதி.. தளபதி என கத்துகிறார்கள் என்றும் என் காதுக்கு தலைவிதி என்று கேட்கிறது என்று விமர்சித்தார். மேலும் அணில் குஞ்சுகள் என சொன்ன சீமான், புலி வெறிகொண்டு வேட்டைக்கு செல்லும் போது குறுக்குமறுக்காக அணில்கள் ஓடுவதாகவும் விமர்சித்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்தது.
செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த யுனஸ்கோ நிறுவனம், அந்த அறிவிப்பில் செஞ்சி கோட்டை மராட்டியர்களால் கட்டப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தது. இதனை சீமான் கண்டித்து இருந்தார். இந்த நிலையில், தமிழ் மன்னர் கோனேரிக்கோன் கட்டியது தான் செஞ்சி கோட்டை என்றும், வரலாற்று திரிபை தடுத்து நிறுத்தி, தமிழ் மன்னர் கோட்டையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கூட்டம் நடந்தது.

விஜய் கட்சியை விமர்சித்த சீமான்
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், தமிழக வெற்றிக் கழகத்தினை சரமாரியாக விமர்சித்தார். கொள்கை இல்லாத கட்சி என்றும், கொள்கை என்று கேட்டால் தளபதி.. தளபதின்னு கத்துகிறார்கள் என்றும் சீமான் விமர்சித்து பேசினார். சீமான் பேசியதாவது:-
என்னடா உங்க கொள்கை.. அப்படின்னு கேட்டால்.. தளபதி தளபதின்னு கத்துறாங்க.. அப்படி கத்தாதிங்கடா.. எனக்கு தலைவிதி தலைவிதி என்று கேட்கிறது.. அப்படி கத்தாதிங்கடா.. சரி விடுங்க.. கொள்கையை சொல்லுடான்னா தளபதி.. தளபதின்னு கத்துறாங்க..
குறுக்காக ஓடும் அணில்கள்
சரி, எதுக்குடா வந்தீங்க அப்படின்னு கேட்டால், டிவிகே... டிவிகே.. என்று கத்துகிறார்கள்.. எனக்கு டீ விக்க டீ விக்க என்று கேட்குதடா.. ஏய் அப்போ டீ விற்க தான் இவ்வளவு பேரு கிளம்பி வந்து இருக்கீங்களடா.. சரி ஓரமா போய் வித்துக்கோங்க.. அணில் குஞ்சுகள்.. புலி வேட்டைக்கு போகும் போது குறுக்காக அணில்கள் ஓடுகின்றன. போப்பா ஓரமா போய் இரு.. மரத்தில் ஏறி அமைதியாய் இரு..
அணிலே அணிலே ஓரமா போய் விளையாடு அணிலே.. குறுக்கு மறுக்குமாக ஓடாதே அணிலே.. ஒரு மான், ஒரு காட்டெருமை, காட்டாடை அடித்து சாப்பிட்டால் புலிக்கு பெருமை.. ஒரு அணிலை அடித்து சாப்பிட்டால் என்ன பெருமை கிடைக்கும். இவ்வாறு சீமான் பேசினார்.
சீமான் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு
முன்னதாக இன்று பொதுக்கூட்டத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச ஆரம்பித்ததும், கீழே செய்தியாளர்கள் மற்றும் சீமானின் பவுன்சர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.
செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் சென்றபோது அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் செய்தி சேகரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை பாதுகாவலர்கள் மறுத்துள்ளனர். இதனால் அங்கு சலசலப்பு உண்டானது.
இதனால் கடும் கோபத்துடன் மேடையில் இருந்து ஆவேசமாக கீழே இறங்கிய சீமான் அவர்களை அடிப்பது போல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சீமானை நிர்வாகிகள், தொண்டர்கள் தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications