Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீலகிரிக்கு ஆபத்து.. மூழ்க போகும் இயற்கையின் பொக்கிஷம்! மீளமுடியாத வீழ்ச்சி..அரசுக்கு பறந்த கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீலகிரி மாவட்டம், சில்லகல்லா புனல் மின்சாரத் திட்டத்திற்காக மார்ச் 20ஆம் தேதி நடைபெறவிருந்த பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டதினைக் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசினையும், இத்திட்டத்திற்கு எவ்வித இசைவும் வழங்கிடக் கூடாது என்று ஒன்றிய அரசினையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தால் (TANGEDCO) சில்லகல்லா நீரேற்றுப் புனல்மின் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. சில்லகல்லா நதியில் (குந்தா நதியின் துணை நதி) ஒரு மேல் அணை மற்றும் தற்போதுள்ள குந்தா அணையின் கீழ்நோக்கி ஒரு கீழ் அணை, இந்த நீர்த்தேக்கங்கள் சுரங்கப்பாதைகள் மூலம் இணைக்கப்படும் திட்டமாகும்.

Seeman Shillakalla Hydroelectric Project ntk

இந்த திட்டம் அடர்ந்த காடுகள் மற்றும் முதன்மை வேளாண் பகுதிகள் உட்பட 800 ஏக்கர் நிலத்தை மூழ்கடிக்கும் ஆபத்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான நீலகிரி, பல்லுயிர் பெருக்கத்தின் முக்கிய அங்கமாகும். தனித்துவமான புல்வெளி அமைப்புகளையும், நீலகிரி வரையாடு, சிறுத்தை மற்றும் புலி போன்ற உயிரினங்களையும் கொண்டுள்ள பகுதியாகும்.

இத்தகைய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுமாயின் இம்முதன்மையான வாழ்விடங்களை அழித்து, இப்பகுதியின் சுற்றுச்சூழல் சமநிலையையே சீர்குலைக்கும். சூழலியல் நலனைப் பாதிக்கும் வகையில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் அண்மையில் வயநாடு சந்தித்த பெரும் இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே அறிந்தும் தடுக்கவியலா நிலை ஏற்படும். மேலும் இத்திட்டம் வரவிருக்கும் பகுதி, முக்கூர்த்தி தேசியப் பூங்கா (3.49 கிமீ தொலைவில்) மற்றும் முதுமலை-முக்கூர்த்தி புலிகள் வழித்தடம் (4.18 கிமீ தொலைவில்) போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ளது.

மேலும் நீலகிரிப் பகுதியானது நிலச்சரிவு ஏற்படக்கூடியப் பகுதி. தீவிர வானிலை நிகழ்வுகள், சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் அத்துமீறல்கள் காரணமாக ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதிப்பினைச் சந்தித்து வருகிறது. பெரிய அணைகளையும் 2.8 கிலோமீட்டர் மற்றும் 1.56 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதைகளையும் கட்டுவது இப்பகுதியினைச் சீர்குலைத்து, நிலச்சரிவைத் தூண்டலாம் மற்றும் நில அதிர்வு அபாயங்களை அதிகரிக்கலாம்.

10,000க்கும் மேற்பட்ட மக்கள், முதன்மையாக 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வேளாண் குடிகள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழக்க நேரிடும். தற்போதுள்ள அணைகள், குந்தா நீர்மின் திட்டம் போன்றவை, ஏற்கனவே இப்பகுதியின் நில அமைப்பினை மாற்றியுள்ளன. சில்லாகல்லா திட்டத்தை இந்நிலையில் முன்னெடுப்பது இப்பகுதியை மீளமுடியாத சுற்றுச்சூழல் வீழ்ச்சிக்கு ஆளாக்கும் அபாயத்தை விளைவிக்கும். 2013ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் கூட, அப்பகுதியின் நீர்மின் திட்டங்கள் சேதத்தை அதிகப்படுத்தியதாகவே கண்டறியப்பட்டது.

குறைந்தது 30 பெரிய மற்றும் சிறிய நீர்மின் திட்டங்களுக்கு இடமளிப்பதற்காகத் தோண்டிய மலைகள் நிறைந்த வண்டல், மணல் மற்றும் பாறைகள், ஆற்றங்கரைகளில் நிர்வகிக்கப்படாமல் விடப்பட்டு வெள்ளத்தின்போது சேற்றையும் பாறைகளையும் கீழ்நோக்கித் தள்ளி, தாழ்வான பகுதிகளை மொத்தமாகப் புதைத்தது. கண்முன்னே இத்தனைச் சம்பவங்கள் நடந்தபிறகும் நீலகிரிப் பகுதியில் இத்திட்டத்தினை முன்னெடுப்பது மக்களின்மீது அரசுக்கு இருக்கும் அக்கறையின்மையையே காட்டுகிறது.

இத்திட்டத்திற்கானக் கருத்துகேட்புக் கூட்டம் எப்போது நடத்தப்பட்டாலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்களின் குரலாய் பங்கேற்று, திட்டத்தினால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தக் கருத்துகளைப் பதிவு செய்வார்கள் என்றாலும் இதனைத் தடுக்கக்கூடிய அதிகாரம் படைத்த அரசுகள் இத்திட்டத்தின் அபாயத்தை உணர்ந்து தற்போதே செயல்பட வேண்டும். இத்தகைய அழிவுத் திட்டத்தினை மக்கள் மீதும் இயற்கையின் மீதும் திணிக்க முற்படும் திமுக அரசு, மேடைகளில் பருவநிலை மாற்றம் குறித்து பேசினால் மட்டும் எல்லாம் மாறிவிடுமா?

சூழலியல் பாதுகாப்பு குறித்து வெற்றுச் சொற்களை மட்டுமே உதிர்த்து, தனது ஆட்சியை முடிக்கப்போகும் திமுகவின் ஆட்சி காலம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்கள் மட்டுமே நிறைந்துள்ளன. ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரக் கூடிய அழிவுத் திட்டங்களுக்கும் போதிய அனுமதிகளை வழங்கித் துணையாய் செயல்பட்டு வருவதன் வழியே, பாஜகவும் திமுகவும் இயற்கைக்கு எதிரான முதலாளித்துவக் கோட்பாட்டில் ஒரே அணியாய் நிற்கின்றனர்.

இனியாவது தன்னுடைய சூழலியல் அழிவுப் போக்கினைக் கைவிட்டு, நீலகிரி மாவட்டம் சில்லகல்லா புனல் மின்சாரத் திட்டத்தினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒன்றிய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+