பெரியார் சிலையை உடைப்போம் என பேசும் நாம் தமிழர் கட்சி.. திமுக வேடிக்கை பார்ப்பதா? திருமுருகன் காந்தி
சென்னை: தந்தை பெரியாரை (Periyar) நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) இழிவுபடுத்தி பேசுவதையும் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது; பெரியார் சிலையை உடைப்போம் என நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பேசுவதையும் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக திருமுருகன் காந்தி கூறியிருப்பதாவது: பெரியாரை அவதூறாக பேசவிட்டு திமுக வேடிக்கை பார்க்கிறது. சதாம் உசேன் சிலையை போல், முஜிபூர் ரகுமான் சிலை போல், லெனின் சிலை போல் பெரியாரின் சிலையை உடைக்கும் பொன்னான காலம் வருமென ஈரோட்டில் நாம் தமிழர் பொறுப்பாளர் ஹூமாயுன் பேசுகிறார். திமுக அரசு என்ன செய்யப்போகிறது? இசுலாமிய சகோதரர்களை வைத்து எதற்காக சீமான் இவ்வாறு பேச வைக்கிறார்? இசுலாமியர்களிடத்தில் பெரியாரை எதிரியாக கட்டமைக்க விரும்புவது பாஜகவின் திட்டமில்லையா?

அரசியல், சமய அடையாளங்களை அழிப்பது சனாதனிகளின் அரசியல். தந்தை பெரியாரின் மீதான தொடர் அவதூறுகளை கட்டவிழ்த்து கொண்டே இருக்கிறது, திமுகவினர் தொலைக்காட்சிகளில், யூட்யூப் சேனல்களில் எதிர்வினையாற்றுவதோடு கடந்து செல்கிறார்கள்.
பாஜகவின் ஊதுகுழலாக இயங்கும் சீமானின் சீரழிவு அரசியலை எதிர்கொள்வதே முதன்மைப்பணி.
பெரியாரை குறித்து நேரடி விவாதத்தினை நடத்தாமல் சீமானின் ஈழப்பயண கட்டுக்கதைகளின் மீதான விவாதங்கள் ஏன் முன்னிலை பெறுகின்றன. பெரியார் குறித்தான சீமானின் பொய்கள் அம்பலமாவது தமிழ்நாட்டின் அரசியலுக்கு முக்கியமானது. சீமான் பொய்யன் என நிரூபிக்க அவரது தமிழக அரசியல் நிலைப்பாடுகளே போதுமெனும் நிலையில் ஈழ அரசியல் வரை பயணம் வேண்டியதில்லை. வி.புலிகள் இயக்கம் இயங்க இயலாத நிலையில், தாம் சொல்லும் பொய்களை வி.பு இயக்கத்தினரால் அம்பலப்படுத்த இயலாது என்பதை அறிந்தே சீமான் ஈ.ழம் குறித்து பொய் கதைகளை பரப்பினார். வி.பு இயக்கத்தின் முன்னனி பொறுப்பாளர்கள் உயிருடன் இருந்திருப்பார்களெனில் சீமான் வாய் என்றோ அடைபட்டிருக்கும்.
பெரியார் குறித்த பொய்களுக்கு பதில் சொல்லட்டும். இதற்காகவே நேரடியாக ஈரோட்டில் களத்தில் நிற்கிறது மே17 இயக்கம் அங்கம் வகிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டணி. எங்களுடன் நேரடி விவாதத்திற்கு வராமல் சீமான் ஓடுவாரெனில் ஈரோட்டில் ஒருநாள் நேரில் எதிர்கொள்வோம். இவ்வாறு திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications