அப்பாடா! தென் மாவட்ட மக்களின் பல வருட ஏக்கம்.. ரயில்வே கொடுத்த தித்திப்பு நியூஸ்.. பயணிகள் குஷி
சென்னை: அனந்தபுரி, கொல்லம் விரைவு ரயில் உள்பட 4 எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்தியாவில் பயணிகளின் போக்குவரத்துக்கு முதுகெலும்பாக இருப்பது ரயில்கள்தான். தொலை தூர பயணம் என்றாலும் சரி.. அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றாலும் சரி பயணிகளின் முதல் சாய்ஸாக ரயில்கள்தான் இருக்கின்றன. தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அதிக அளவில் பயணித்து வருகிறார்கள்.

ரயில் பயணம்
இதனால், ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணிப்பவர்கள் பேருந்து பயணம் அவ்வளவாக வசதியாக இருக்காது என்பதால் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள்.
கூடுதல் பெட்டிகள் இணைப்பு
ரயில்களில் கழிவறை வசதி, ஸ்லீப்பர் வசதி இருப்பதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் செல்பவர்கள் சிரமம் இன்றி பயணிக்க முடியும். இதனால், முதலில் ரயில்களில் டிக்கெட் இருக்கிறதா என்று பார்த்துவிட்டே பயணிகள் கிளம்புகிறார்கள். அதுபோக ரயிலில் முன்பதிவு இடம் கிடைக்காவிட்டாலும் கூட அன்ரிசர்வ்டு பெட்டிகளில் கூட ஏறி சென்றுவிடலாம் என்பது பயணிகளின் எண்ணமாக உள்ளது.
ஆனால், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் கால் வைக்க முடியாத அளவுக்கு உள்ளது. இந்த நிலையில்தான், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 4 விரைவு ரயில்களில் அன்ரிசர்வ்டு பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கொல்லம், அனந்தபுரி எக்ஸ்பிரஸ்
* சென்னை எழும்பூர் - தஞ்சை இடையே இயக்கப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி இணைக்கப்படும்.
* அதேபோல சென்னை எழும்பூர் - கொல்லம் விரைவு ரயிலில் ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி இணைக்கப்படுகிறது. ஜூலை 1 முதல் இணைக்கப்படும்.
* நாகர்கோவில் - கச்சிகுடா விரைவு ரயிலில் ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி வரும் ஜூலை 5 முதல் இணைக்கப்படும்.
* எழும்பூர் - கொல்லம் இடையே இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் - கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி ஜூலை 2 முதல் இணைக்கப்படுகிறது.
தென் மாவட்ட பயணிகள் குஷி
தமிழகத்தில் மிக முக்கியமான ரயில் வழித்தடமாக உள்ள சென்னை - திருச்சி, மதுரை வழியாக இயங்கும் அனந்தபுரி, கொல்லம் விரைவு ரயிலில் ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படும் என்ற அறிவிப்பு ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஏனெனில் இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் என்பது எப்போதும் அலைமோதும்.
இதனால், கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி என்பது கடைசி நேரத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகுந்த பலனளிக்கும் என்று ரயில் பயணிகள் கூறியுள்ளனர். அதேபோல, சென்னை - தூத்துக்குடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளுக்கும் நேரடி ரயிலை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் நீண்ட காலமாக உள்ளது.












Click it and Unblock the Notifications