ஏம்ப்பா 200வது வார்டு.. நான்தான் 250வது வார்டுல இருந்து பேசுறேன்.. மாறப்போகுது சென்னை! அமைச்சர் ஓகே
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகத்து மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார். மேலும், சென்னையில் நாய்கள் பிரச்சினை அதிகரிக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தர்.
தமிழ்நாட்டில் சட்டசபை கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரையுடன் தொடங்கும்.. நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர் என் ரவி உரையுடன் தொடங்கியது.

அதைத் தொடர்ந்து பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு மறுநாள் 20ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மானிய கோரிக்கை: அதன் பிறகு சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சூழலில்தான் துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காகக் கடந்த ஜுன் 20ம் சட்டசபை மீண்டும் கூடியது. முதல் நாள் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி மட்டும் செலுத்தப்பட்டது.. அதைத் தொடர்ந்து நேற்று முதல் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. முதல் நாளான நேற்று நீர்வளத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகள் மீது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
இதற்கிடையே இன்றைய தினம் நகராட்சி துறை மீது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.. அப்போது உரையாற்றிய கே என் நேரு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். தெரு நாய் பிரச்சனைகளில் இருந்து மக்களைக் காக்கும் பணியை அரசு நிச்சயம் மேற்கொள்ளும் என அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.
வளர்ப்பு நாய்கள்: சட்டசபையில் நகராட்சி நிர்வாகத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அவர், "தெரு நாய்களால் நிறையப் பிரச்சனை ஏற்படுகிறது.. கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகள் இந்த விஷயத்தைச் சரியாகக் கையாளாத காரணத்தால் பிரச்சனை வருகிறது. வளர்ப்பு நாய்களைப் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் 78 பயிற்சி பெற்ற அலுவலர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இதில் அதிக கவனம் எடுத்துள்ளோம். நாய்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி, மக்களை பாதுகாக்கும் பணியை அரசு எடுக்கும்.
அதேபோல் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகளாலும் பிரச்சினை ஏற்படுகிறது. இதுபோல சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் முதல்முறை பிடிக்கப்பட்டால் உரிமையாளர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை பிடிக்கப்பட்டால் உரிமையாளர்களுக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையாகப் பிடிக்கப்பட்டால் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும். அதற்கான சட்டம் கொண்டு வரப்படும்.
வார்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரை இங்கே 200 வார்டுகளில் 89 லட்சம் மக்கள் உள்ளனர். ஒரு வார்டுக்கு சராசரியாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுதலாக வசிக்கின்றனர்.. எனவே, மக்கள்தொகைக்கு ஏற்பட புது வார்டுகள் உருவாக்கப்படும். சென்னையில் வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்..
தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் தற்போது இருக்கின்றன. இந்த பேரூராட்சிகளின் எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்கப்படும். தமிழகத்தில் 138 நகராட்சிகள் உள்ளன. அவை 159ஆக உயரும்.. அதேபோல 25 மாநகராட்சிகள் தற்போது இருக்கும் நிலையில், அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications