இது என்ன நியூயார்க்கா? சர்வதேச தரத்திற்கு மாறிய நுங்கம்பாக்கம் நடை மேம்பாலம்.. வாவ் செம மாற்றம்
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் செல்வதற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட நடை மேம்பாலம் நேற்று (ஆக.16) மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.5.42 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட இந்த நடை மேம்பாலத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
நாளொன்றுக்கு சுமார் 2 லட்சம் பயணிகள் இந்த நடை மேம்பாலத்தை பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது இது மேம்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப நாட்களாக தொடர் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மெரினா கடற்கரை, ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் உள்ள பெரியார் சிலை சந்திப்பு என பல இடங்களில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை மாநகராட்சி முன்னெடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது லயோலா கல்லூரியிலிருந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் செல்லும் பாதசாரிகள் நடை மேம்பாலம் ரூ.5.42 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
லயோலா கல்லூரி பேருந்து நிறுத்தத்திலிருந்து ஹாரிங்டன் சாலை வழியாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் பாதையில் இந்த பாலம் அமைந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 2 லட்சம் பயணிகள் இந்த மேம்பாலத்தை பயன்படுத்துகின்றனர். இந்த நடை மேம்பாலம் மேம்படுத்தப்படாத நாட்களில் பயணிகள் ரயில் நிலையத்திற்கு செல்வதற்கு ஷேர் ஆட்டோக்களையும், பேருந்துகளையும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் மக்களின் வசதிக்காக இந்த மேம்பாலம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள இந்த நடை மேம்பாலத்தால் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மூலதன மானியம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகிய நிதிகளின் மூலம் இந்த மேம்பாலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனை நேற்று அமைச்சர் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா ராஜன் மற்றும் ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனர்.
இந்த மேம்பாலத்தில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் இருந்ததாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாது வார்டு எண் 100-ல் கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தையும் மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். 2,800 சதுர அடி இட வசதி கொண்ட இந்த கூடத்திற்கு ஒரு நாள் வாடகை ரூ.8,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆக.22-ல் சென்னை தினம்: ஓவியம், போட்டோ, ஷார்ட் பிலிம் போட்டிகளை கனஜோராக நடத்துகிறது சென்னை மாநகராட்சி