டெல்லிக்கு போனீங்க..நான் சொந்த ஊருக்கே போறேன்! குஜராத்துக்கு பறந்த ஓபிஎஸ்! இன்று நடக்குமா ‘மீட்டிங்’
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் தற்போது ஓபிஎஸ்ஸை பாஜக ஓரங்கட்டி விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனிடையே நேற்று குஜராத் சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்து நேரில் முறையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா காலத்தில் ராணுவ கட்டுப்பாட்டோடு வலம் வந்த அதிமுக என மாபெரும் இயக்கம் தற்போது ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோரின் அதிகார மோதலால் இரு அணிகளாக பிளவுபட்டு கிடக்கிறது.
ஏற்கனவே சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனி அணிகளாக அதிமுகவிலிருந்து விலகிச் சென்ற நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு மேலும் கட்சியை வலுவிழக்கச் செய்யும் என்கின்றனர் மூத்த நிர்வாகிகள் ஆனால் முக்கிய தலைவர்கள் அதனை கண்டு கொள்வதாக தெரியவில்லை.

ஓ. பன்னீர்செல்வம்
தொடர்ந்து பாஜக தலைமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கியத்துவம் தருவதை பொருத்துக் கொள்ளாத எடப்பாடி பழனிச்சாமி இடையில் தனது முன்னாள் அமைச்சரவை சகாக்கள் மூலம் பாஜகவால் தனித்துப் போட்டியிட முடியுமா என பேச வைத்தார். இதனால் அதிர்ந்து போன பாஜக தலைமை எடப்பாடி தரப்பை சமரசம் செய்து ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணிக்க தயாராகிவிட்டதாக கூறப்பட்டது. அந்த வகையில் ஜி20 மாநாடு தொடர்பாக டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது இதனையடுத்து அவர் டெல்லிக்கு பறந்தார்.

எடப்பாடி ஹாப்பி
ஜி 20 மாநாடு நடத்த அதிமுக முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனக் கூறியதோடு பிரதமர் மோடியை மகிழ்ச்சியுடன் சந்தித்த புகைப்படங்களையும் எடப்பாடி மகிழ்ச்சியுடன் வெளியிட்டார் அதனை வைத்து கொண்டாடிய எடப்பாடி தரப்பு ஆதரவாளர்கள் பாஜக தலைமையின் ஆதரவு எடப்பாடிக்கு தான் உள்ளது இதுதான் அவர் அதிமுகவின் எதிர்காலம் எனக் கூறி வந்தனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இது தொடர்பாக எடப்பாடிக்கு அழைப்பு அனுப்பிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கடிதம் எழுதினார். அதில் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு இங்கு வருங்காலங்களில் அப்படி எடப்பாடியை அழைக்கக் கூடாது என கேட்டுக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி
இதனால் அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிட வேண்டாம் என மறைமுகமாக ஓபிஎஸ் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே குஜராத் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவு வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை குஜராத்தில் பாஜக பெற்றுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக கடிதம் எழுதினார். அதில் மற்ற இருவருக்கும் வாழ்த்துக்களை நிறுத்திக் கொண்ட நிலையில் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் வருங்காலத்தில் பாஜகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் நட்பு தொடர வேண்டும் என விரும்புவதாக அழுத்தி குறிப்பிட்டிருந்தார்.

குஜராத் பயணம்
இந்நிலையில் தான் சட்டமன்ற தேர்தலில் குஜராத் மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்ற பிறகு இன்று பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில் குஜராத் முதல்வராக பூபேந்திர பட்டேல் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதை அடுத்து இன்று காந்தி நகரில் நடைபெறும் பதவி ஏற்பு விழா பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதை அடுத்து இந்த விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி வரும் ஓ.பன்னீர்செல்வம் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

சந்திப்பு நடக்குமா?
பதவியேற்பு விழாவில் பங்கேற்க வரும் பிரதமர் மோடி அமித் ஷாவை சந்தித்து பேச திட்டமிட்டு இருக்கிறார் ஓபிஎஸ். ஏற்கனவே பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் நிச்சயம் தனக்கு அதிமுகவில் நிகழ்ந்து வரும் நிகழ்வுகள் குறித்து புகார் அளிப்பார் எனவும் பாஜக தலைமையின் ஆதரவை கேட்டு பெறுவார் என்கின்றனர் விவரம் அறிந்த ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள். அதே நேரத்தில் பிரதமர் ஓபிஎஸ் சந்திப்பு நிச்சயமானது கிடையாது நேரம் கிடைத்தால் ஓபிஎஸ்ஸை இருவரும் சந்திப்பார்கள் இல்லையேல் வழக்கமான சம்பிரதாய வணக்கங்களுக்கு பிறகு ஓபிஎஸ் சென்னை திரும்பலாம் என்கின்றனர். ஓபிஎஸ்ஸை பிரதமர் சந்திப்பாரா சந்தித்தால் ஆதரவான சிக்னல்கள் கிடைக்குமா என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications